நிர்வாகிகள் பதவிக்காலத்தை நீட்டித்ததை எதிர்த்து வழக்கு நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல்? ஐகோர்ட் கேள்வி
சென்னை: நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல் முடிவுகளின்படி கடந்த 2022ம் ஆண்டு முதல் தலைவராக நடிகர் நாசர், பொதுச் செயலாளராக நடிகர் விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி, துணைத் தலைவர்களாக பூச்சி முருகன் மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால் நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை செல்லாது என்றும் சட்ட விரோதமானது என்றும் அறிவிக்க கோரி நம்பிராஜன் என்ற உறுப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நம்பிராஜன் தரப்பில், பதவி காலத்தை நீட்டித்தது சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கும், தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்திற்கும் விரோதமானது. நிர்வாகிகளின் பதவி காலத்தை நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். உயர்நீதிமன்ற நீதிபதியை ஆணையராக நியமித்து நடிகர் தேர்தல் நடத்துமாறு உத்தரவிட வேண்டும்.
தேர்தல் நடத்தும் வரை தற்போதைய நிர்வாக குழு மற்றும் செயற்குழு உள்ளிட்ட நிர்வாகிகள் எந்த முடிவும் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. அப்போது, நடிகர் சங்க நிர்வாகிகள் தரப்பு வழக்கறிஞரைப் பார்த்து, நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு நடிகர் சங்க நிர்வாகிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. தற்போது, நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
பணிகள் முடிவடையும் நிலையில் தேர்தல் நடத்தினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்படும் என கருதி நிர்வாகிகளின் பதவிக்காலத்தை நீட்டித்து பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்காமல் இந்த வழக்கு தொரப்பட்டுள்ளது. நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் நடந்த போதும், வழக்குகள் காரணமாக 2022ம் ஆண்டு தான் நிர்வாகிகள் பொறுப்பேற்றனர் என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, நடிகர் சங்க நிர்வாகிகள் தரப்பு வாதங்களுக்காக விசாரணை செப்டம்பர் 15ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.