கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆர்.ஆர்.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜே.பி.பூங்காவில் துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் பொதுமக்கள் கருத்து கேட்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அந்த தொகுதி பாஜ எம்எல்ஏ முனிரத்னா ஆர்எஸ்எஸ் தொப்பி அணிந்து வந்து முன்னிருக்கையில் அமர்ந்தார். ஏற்கனவே காங்கிரசில் இருந்த நண்பர் என்ற முறையில் கருப்பு தொப்பி எம்எல்ஏ முனிரத்னா மேடைக்கு வாருங்கள் என்று துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் அழைப்பு விடுத்தார்.
இதனால் கோபமாக மேடைக்கு சென்ற முனிரத்னா, மைக்கை பறித்து, இது அரசு விழா, காங்கிரஸ் விழா அல்ல. அப்படி இருக்கும் போது பேனரில் நாடாளுமன்ற உறுப்பினர் படமோ, இந்த தொகுதி எம்எல்ஏ படமோ அச்சிடப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் அவரை சூழ்ந்து கொண்டு ரேபிஸ்ட் முனிரத்னா என்று முழக்கம் எழுப்பினர். உடனே போலீசார் பாஜ எம்எல்ஏவை பாதுகாப்புடன் வெளியே அழைத்து சென்றனர். அங்கு காந்தி படத்தை வைத்துக்கொண்டு தனியாளாக தர்ணாவில் அவர் ஈடுபட்டார்.
இதற்கு முன்பு முனிரத்னா காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு நல்ல நண்பர் என்பதால் அவ்வாறு நட்பு ரீதியில் அழைத்து இருக்கலாம். இதில் தவறு கிடையாது. அதே நேரம் அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் முனிரத்னா அவ்விதம் நடந்து கொண்டிருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் கொடுத்தனர். இந்த சம்பவத்தால் தான் மாநிலத்தில் ஆர்எஸ்எஸ்சுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று பிரியாங்க் கார்கே முதல்வருக்கு கடிதம் எழுதினார்.
பாஜ எம்எல்ஏ முனிரத்னாவுக்கு பொறுமை கிடையாது. அவரை எம்எல்ஏவாக தேர்வு செய்ததற்காக ஆர்.ஆர்.தொகுதி மக்கள் வருத்தப்படுகின்றனர் என்று டி.கே.சிவகுமார் கூறினார். பாஜ எம்எல்ஏ மீது பாலியல் வழக்கு இருக்கிறது. இதை காங்கிரஸ் அரசு திட்டமிட்டு தொடர்ந்துள்ளது. அவ்வாறு செய்தது டி.கே.சிவகுமார் தான் என்று பாஜவினர் குற்றம்சாட்டினர். இந்நிலையில் பாஜவில் சில தலைவர்கள் தங்கள் எம்எல்ஏ முனிரத்னாவுக்கு எதிராக கருத்து பதிவு செய்துள்ளனர். பாலியல் வழக்கு உள்பட தொடர் குற்றச்சாட்டுகளால் பாஜவில் இருந்து முனிரத்னா ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளார்.
இப்படியே இருந்தால் தனது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடும் என்பதால் அவரே, திட்டமிட்டு துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரச்னையை எழுப்பி பாஜ தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் என்று கூறுகின்றனர். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய முனிரத்னாவை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் அப்போதே வலியுறுத்தினர். ஆனால் பாஜ மேலிடம் அவர் மீது எந்த நடவடிக்கையு்ம் எடுக்கவில்லை. அதே சமயம் அடுத்த தேர்தலில் அவருக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. முனிரத்னா அரசியலில் இருந்து விலக செய்து அந்த தொகுதியை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள காங்கிரஸ் கட்சி பல்வேறு வகையிலும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் தா்ன் செயல் திட்டம் வகுத்து கொடுத்து வருகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.