Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

விடிய விடிய கணவர் வீட்டு வாசல் முன் கதறி அழுத மனைவி

*வீடியோ வைரலால் பரபரப்பு

திருவாரூர் : திருவாரூரில் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என மனைவி கணவர் வீட்டு வாசல் முன்பாக விடிய விடிய கதறி அழுத வீடியோ வைரலால் பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் ரயில் நிலையம் அருகே புகையிலை தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் சந்திரன். திருவாரூர் டாஸ்மாக் கடை ஒன்றில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகன் மணிகண்டன் (25). இவருக்கும், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா சிக்கவலம் கிராமத்தில் வசித்து வரும் சிவப்பிரகாசம் மகள் தீபா (22) என்பவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பின்னர் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக தீபா தனது தந்தை வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு மணிகண்டன் திருவாரூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த மாதம் 19ம்தேதி இந்த வழக்கு தொடர்பாக தம்பதி இருவரும் நேரில் அழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுள்ளது.

2வது விசாரணை வரும் 23ம்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் இருவரும் ஆஜராகுமாறு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் கணவர் வீட்டிற்கு வந்த தீபா, அங்கு வீட்டிற்குள் சென்றபோது கணவரின் குடும்பத்தினர், தீபா மற்றும் அவரை சார்ந்தவர்களை வீட்டை விட்டு வெளியேற்றி உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தான் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், நீங்களும் (மாமியாரை பார்த்து ) ஒரு பெண் தானே தயவு செய்து என் கணவரோடு பேச விடுங்கள் என மாமியாருடன் மன்றாடியதோடு, தயவு செய்து கதவை திறங்க... ப்ளீஸ்ங்க என கணவர் வீட்டு முன்பாக விடிய விடிய கதறி அழுத சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று சம்பவ இடத்திற்கு சென்ற திருவாரூர் மகளிர் போலீசார் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் சாயிராபானு ஆகியோர் தீபாவிடம் சமாதானமாக பேசி அவரை சாப்பிட வைத்துள்ளனர்.

வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இது தொடர்பாக நீதிமன்றத்தில் தான் தீர்வு காண முடியும் என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து தன்னை குடும்பத்துடன் சேர்த்து கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறி நேற்று இரவு 8 மணி வரையில் தீபா மற்றும் அவரது குடும்பத்தினர் திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் காத்திருந்தனர்.