Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் அபாயம்: பிரான்ஸில் உள்ள மருத்துவமனைக்கு பறந்த அவசர உத்தரவு

பிரான்ஸ்: ரஷ்யாவின் தாக்குதல் அபாயம் குறித்து ஜெர்மனி அதிபர் எச்சரித்த நிலையில், மருத்துவமனைகளை ஆயத்த நிலையில் வைக்க பிரான்ஸ் உத்தரவிட்டு இருப்பது பெரும் போர் குறித்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சியால் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால், உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க நேட்டோ நாடுகளின் துருப்புகளை நிறுத்தக்கூடாது என ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. ஐரோப்பிய நாடுகளின் படைகளும் நேட்டோ படைகளாகவே கருதப்படும் என்று ரஷ்யா கூறியிருந்தது.

இந்நிலையில், ஜெர்மனியின் ராக்ஸ்டாக் நகர் அருகே பால்டிக் கடல் பகுதியில் அந்நாட்டு கடற்படையினர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகாப்டரில் சென்று போர் கப்பலில் இறங்கி அதை பார்வையிட்ட ஜெர்மனி அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், ரஷ்யாவால் போர் அபாயம் நேரக்கூடும் என்று எச்சரித்தார். இந்நிலையில், பிரான்ஸ் அரசு நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மிகப்பெரிய போர் சூழலை சமாளிக்க ஆயத்தமாக வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 18ம் தேதியே மண்டல சுகாதார அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில், ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க 10லிருந்து 180 நாட்களுக்குள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. விமான நிலையம், துறைமுகம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் வெளிநாட்டு ராணுவத்தினருக்கு உடனடியாக சிகிச்சை அளித்து சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கான அவசியம் ஏற்படும் என்றும் பிரான்ஸ் அரசு கூறியுள்ளது. இது போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெலாரஸ் நாட்டுடன் இணைந்து வருகின்ற 12ம் தேதியில் இருந்து 5 நாட்கள் ரஷ்யா போர் ஒத்திகையில் ஈடுபட உள்ளது. இதில் அணு ஆயுதங்களையும் ரஷ்யா பயன்படுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது.