Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

யுரோ கோப்பை கால்பந்து: ஜெர்மனி கோல் மழை

மியூனிக்: ஐரோப்பிய நாடுகளுக்கு இ டையிலான ‘யுரோ கோப்பை கால்பந்து’ போட்டி நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ஜெர்மனி-ஸ்காட்லாந்து அணிகள் களம் கண்டன. ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடந்த இந்த ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன் ஆரம்பம் முதலே ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது. அதன் விளைவாக ஜெர்மனியின் ரிட்ஸ் 10வது நிமிடத்திலும், முசியலா 19வது நிமிடத்திலும் கோலடித்து அணிக்கு முன்னிலைப் பெற்று தந்தனர். முதல் பாதியின் 44வது நிமிடத்தில் முரட்டு ஆட்டம் ஆடிய ஸ்காட்லாந்து வீரர் போர்டிவுஸ், சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு ஸ்காட்லாந்து 10வீரர்களுடன் விளையாடியது. முதல் பாதியின் கூடுதல் நேரத்தில்(45+1) கிடைத்த பெனால்டிக் வாய்ப்பை ஹவெர்ட்ஸ் சரியாக பயன்படுத்தி கோலடித்தார்.

எனவே முதல் பாதியின் முடிவில் ஜெர்மனி 3-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து 2வது பாதியின் 68வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ஃபுல்க்ரக் மேலும் ஒரு கோலடித்தார். ஸ்காட்லாந்து வீரர்கள் கடுமையாக போராடியும் பந்தை கைப்பற்றவே சிரமப்பட்டனர். அதனால் அவர்களின் கோலடிக்கும் முயற்சிகள் பலன் தரவில்லை. எனினும் அவர்களுக்கான கோலையும் ஜெர்மனி வீரர்களே அடித்தனர். ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ஸ்காட்லாந்து வீரர்களின் கோலடிக்கும் முயற்சியை தடுத்த ஜெர்மனி வீரர் ரூடிகர் மீது பட்ட பந்து சுயகோலானது. ஆட்டத்தின் முடிவில் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில்(90+3) ஜெர்மனி வீரர் கேன் ஒரு கோல் அடிக்க ஆட்டம் 5-1 என்ற கோல் கணக்கில் முடிவுக்கு வந்தது. முதல் வெற்றியை பதிவு செய்த ஜெர்மனியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஜமால் முசியலா ஆட்ட நாயகனாக தேர்வானார்.