Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

யூரோ கோப்பை கால்பந்து: இங்கிலாந்து மகளிர் மீண்டும் சாம்பியன்; ஸ்பெயினை வீழ்த்தி அசத்தல்

பேஸல்: யூரோ கோப்பை மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் சுவிட்சர்லாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தன. அரை இறுதிப் போட்டியில் இத்தாலி அணியை வென்ற, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரை இறுதியில் ஜெர்மனி அணியை வென்று, ஸ்பெயின் இறுதிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில், ஸ்பெயின் - இங்கிலாந்து அணிகள் மோதிய இறுதிப் போட்டி பேஸல் நகரில் செயின்ட் ஜேகப் பார்க் அரங்கில் நேற்று நடந்தது. இரு அணிகளை சேர்ந்த வீராங்கனைகளும் துவக்கம் முதல் துடிப்புடன் கோலடிக்கும் முனைப்பில் செயல்பட்டனர்.

போட்டியின் 25வது நிமிடத்தில் ஸ்பெயின் வீராங்கனை மரியோனா கால்டென்ல்லீ கோல் அடித்து தமது அணியை முன்னிலைப்படுத்தினார். போட்டியின் 2வது பாதியில், 57வது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை அலெஸியா ரூஸோ அற்புதமாக கோலடித்து போட்டியை சமநிலைக்கு கொண்டு வந்தார். அதன் பின் கடைசி வரை வேறு யாரும் கோல் போடாததால், பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதில், இங்கிலாந்து அணி, 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துள்ளது.