கோவை: வால்பாறைக்கு சுற்றுலா செல்ல நவ.1ம் தேதி முதல் இபாஸ் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. கோவை மாவட்டம் வால்பாறைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், வரும் நவம்பர் 1-ந்தேதியில் இருந்து வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது; சென்னை ஐகோர்ட்டு வெளியிட்ட உத்தரவின்படி கோவை மாவட்டம் வால்பாறைக்கு வரும் நவம்பர் 1ம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.
எனவே வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெற்று பயணம் செய்ய வேண்டும். சுற்றுலா பயணிகள் தங்களின் வாகனங்களுக்கு இ-பாஸ் பெறுவதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் ஆழியார், சோலையார் சோதனை சாவடிகளிலும் இ-பாஸ் பெறலாம். இ-பாஸ் இல்லாத வாகனம் வால்பாறைக்குள் அனுமதிக்கப்படாது. வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக் கூடாது. சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வருவதை கண்காணிக்க வருவாய்த்துறையினர், வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் உள்ளாட்சித்துறையினர் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
