எமிரேட்ஸ் அணிக்கு எதிராக டி20 27 பந்தில் 60 விளாசி இந்தியா அசுர வெற்றி: சுழலில் மாயம் செய்த குல்தீப்
துபாய்: துபாயில் நேற்று நடந்த ஆசியா கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், பி பிரிவில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. எமிரேட்ஸ் அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான அலிஷான் ஷரஃபு, தடாலடியாக 17 பந்துகளில் 22 ரன் எடுத்து, ஜஸ்பிரித் பும்ரா பந்தில் கிளீன் போல்டானார். பின் வந்த முகம்மது ஸொயப் (2 ரன்), வருண் சக்ரவர்த்தியின் மந்திர பந்து வீச்சில், ஆட்டமிழந்தார்.
பின், 9வது ஓவரை வீசிய குல்தீப் யாதவின் சுழலில் சிக்கி, ராகுல் சோப்ரா (3 ரன்) வெளியேறினார். அவர் வீசிய அடுத்த 3வது பந்தில், கேப்டன் வஸீமும் (19 ரன்) வீழ்ந்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் ஹர்ஷித் கவுசிக்கை கிளீன் போல்டாக்கிய குல்தீப், ஆட்டத்தின் போக்கை இந்தியாவின் கட்டுக்குள் கொண்டு வந்தார். எமிரேட்ஸ், 9 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 50 ரன்னுடன் தோல்வியை எதிர்நோக்கி ஆட்டத்தை தொடர்ந்தது. அதன் பின், ஷிவம் தூபே பந்துகளில் ஆசிப் கான் (2 ரன்), துருவ் பரஷார் (1 ரன்) வீழ்ந்தனர். சிம்ரஞ்சீத் சிங் (1 ரன்), அக்சர் பந்தில் ஆட்டமிழந்தார்.
கடைசி விக்கெட்டாக ஹைதர் அலியை (1 ரன்) குல்தீப் யாதவ் வீழ்த்த, 13.1 ஓவருக்குள் 57 ரன்னுடன் எமிரேட்சின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பின், 58 ரன் இலக்குடன் இந்தியா களமிறங்கியது. துவக்க வீரர்கள் அபிஷேக் சர்மா, சுப்மன் கில் கிடைத்த பந்துகளை எல்லாம் சிக்சர், பவுண்டரிகளாக விளாசித் தள்ளினர். அபிஷேக் 30 ரன்னில் அவுட்டானார். இருப்பினும், 4.3 ஓவரில், 1 விக்கெட் இழப்புக்கு 60 ரன் எடுத்து இந்தியா இமாலய வெற்றி பெற்றது. சுப்மன் கில் 20, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 7 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.