Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

பெள்ளட்டிமட்டம் எஸ்டேட்டில் 2 காட்டு யானைகள் முகாம்: தேயிலை பறிக்க தொழிலாளர்களுக்கு தடை

குன்னூர்: தேயிலை தோட்டங்கள் வழியாக காட்டு யானைகள் புதிய வழித்தடத்தில் வருவதால், பெள்ளட்டி மட்டம் பகுதியில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்க வனத்துறையினர் தற்காலிகமாக தடை விதித்து உள்ளனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த வாரம் சாரல் முதல் மிதமான மழை பெய்ததால், வனப்பகுதிகளும், தேயிலை தோட்டங்களும் தற்போது பசுமைக்கு திரும்பியுள்ளது. இதனால், காட்டு யானை கூட்டம் தற்போது பல குழுக்களாக பிரிந்து, மாவட்டத்தின் பல்ேவறு பகுதிகளில் நகருக்குள் படையெடுத்து வருகின்றன.

இந்த நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு பர்லியார் பகுதியில் சுற்றித்திரிந்த 6 காட்டு யானைகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். தற்போது அந்த கூட்டத்தில் இருந்து 2 காட்டு யானைகள் மட்டும் தனியாக பிரிந்து புதிய வழித்தடங்களை அறிந்து முத்திரி எஸ்டேட், ஆடர்லி, மேல்கரன்சி போன்ற பகுதிகளை கடந்து தற்போது பெள்ளட்டிமட்டம் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளது. பெள்ளட்டிமட்டத்தை சுற்றி அனக்காடு, கோடமலை, டிரம்ளா எஸ்டேட் போன்ற தேயிலை தோட்டங்கள் அதிகளவில் இருப்பதால் அந்த இடத்திற்கு தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்களுக்கு வனத்துறையினர் தற்காலிகமாக தடை விதித்துள்ளனர். தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதாக கூறி சம்பந்தப்பட்ட கிராம பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முதன்முறையாக, பெள்ளட்டிமட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் தேயிலை தோட்ட விவசாயிகளும், பொதுமக்களும் பீதி அடைந்துள்ளனர்.

குன்னூர் வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழையாதவாறு காட்டுக்குள் விரட்டியடிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பது தெரியவந்தால் அதுபற்றி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். யானைகளை புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் எச்சரிகை விடுத்துள்ளார்.