உலக யானைகள் தினம் யானைகள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் திகழ உறுதியேற்போம்: முதல்வர் எக்ஸ்தள பதிவு
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது: உலக யானைகள் நாளில், யானைகளின் அளப்பரிய பங்கினை குறித்துச் சிந்தித்து பார்ப்போம். கோவையில், ஒன்றிய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் யானைகள் நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு, மதுக்கரையில் நாம் அமைத்துள்ள செயற்கை நுண்ணறிவு எச்சரிக்கை அமைப்பை பார்வையிட உள்ளார்.
இந்த அமைப்பின் மூலம் 2,800 முறை யானைகள் ரயில் தண்டவாளத்தை பாதுகாப்பாக கடந்து சென்றுள்ளன. இதனால் 2024ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து ஒரு யானை கூட ரயில் மோதி உயிரிழக்காமல் காப்பாற்றியுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில், தெப்பக்காட்டில் யானை பாகர்களுக்கான கிராமத்தையும் திராவிட மாடல் அரசின் சார்பில் தொடங்கி வைத்தேன். நமது யானைகளை அக்கறையோடு பராமரிக்கும் பாகர்களுக்கான சுற்றுச்சூழலோடு இணைந்த வீடுகளை அது கொண்டுள்ளது. யானைகளை பாதுகாப்பதோடு யானை பாகர்களின் நலனையும் இது மேம்படுத்துகிறது. இனி வரும் காலங்களிலும் யானைகள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் திகழச் செய்ய இந்நாளில் உறுதியேற்போம்.