Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூடலூர் அருகே இன்று அதிகாலை காட்டு யானை தள்ளி சாய்த்ததில் மின்கம்பி மீது விழுந்த பாக்குமரம்: மரத்தை தொடாததால் உயிர் தப்பியது

கூடலூர்: கூடலூர் அருகே இன்று அதிகாலை காட்டு யானை தள்ளி சாய்த்ததில் பாக்குமரம் மின்கம்பி மீது விழுந்தது. மரத்தை தொடாததால் யானை உயிர் தப்பியது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த புத்தூர் வயல் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை அங்குள்ள விவசாய நிலத்துக்குள் புகுந்தது. அங்கிருந்த பாக்கு மரத்தை தள்ளி சாய்த்தது. அந்த மரம் புத்தூர்வயல் பகுதியில் இருந்து மகாவிஷ்ணு கோயில் செல்லும் சாலையின் குறுக்கே சென்ற மின் கம்பி மீது விழுந்தது. யானை தோட்டத்தில் இருந்து வெளியே வராமல் அங்கேயே வெகு நேரமாக நின்றது. பின்னர் அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்றது.

யானை வந்திருப்பதை அறிந்து மக்கள் அதிகாலை நேரத்தில் வெளியே வந்து பார்த்தனர். அப்போது மின்கம்பி பாக்கு மரம் விழுந்திருப்பதை அறிந்தனர். மின் கம்பி மீது மரம் விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் மரத்தில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மின்வாரியத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சாலையின் குறுக்கே மின்கம்பி மீது விழுந்த பாக்குமரம் வெட்டி அகற்றப்பட்டது. பாக்கு மரத்தை சாய்த்த யானை சாலைக்கு வந்து பாக்குகளை சாப்பிட முயன்றிருந்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கும்.

மரத்தின் மீது மின்சாரம் பாய்ந்துகொண்டிருப்பதை அறியாமல் அவ்வழியாக சென்ற பொதுமக்களில் யாராவது ஒருவர் பாக்கு மரத்தை தொட்டிருந்தாலும் உயிராபத்து ஏற்பட்டு இருக்கும். யானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தும் நிலையில், அவற்றால் இதுபோன்று விபரீதம் ஏற்படும் சூழல் உருவாகிறது. எனவே வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் வருவதை நிரந்தரமாக தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசும், வனத்துறையும் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.