Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நாட்டின் 2ஆவது யானை பாகன் கிராமத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (6.10.2025) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாமில், பாகன்கள் மற்றும் யானை பராமரிப்பாளர்களின் நலனுக்காக 5.40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 47 பணியாளர் குடியிருப்புகள் கொண்ட இந்தியாவின் இரண்டாவது யானைபாகன் கிராமத்தை திறந்து வைத்தார். மேலும், யானைகளை பராமரிக்கும் காவடி பணியிடங்களுக்கு 6 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காட்டில் இந்தியாவின் முதல் யானைபாகன் கிராமம் 13.5.2025 அன்று முதலமைச்சர் அவர்களால் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, யானைகளின் பராமரிப்பு மற்றும் தோழமைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் பாகன்கள் மற்றும் காவடிகளின் தன்னலமற்ற சேவை அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் இந்தியாவின் இரண்டாவது பாகன் கிராமம் அதன் தொடர்ச்சியாக, கோழிக்கமுத்தி யானைகள் முகாமில், பாகன்கள் மற்றும் யானை பராமரிப்பாளர்களின் நலனுக்காக 5.40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 47 பணியாளர் குடியிருப்புகள் கொண்ட இந்தியாவின் இரண்டாவது யானைபாகன் கிராமத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.

இந்தியாவின் பழமையான யானை முகாமில் ஒன்றான கோழிக்கமுத்தி யானைகள் முகாம், யானை மேலாண்மையில் பல தலைமுறைகளாக பாரம்பரிய அறிவைப் பெற்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த யானைப் பாகன்களின் இருப்பிடமாகும். இந்த முகாமில் தற்போது 24 யானைகள் உள்ளன. முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, இம்முகாம்களில் பாதுகாப்பு விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக யானைகளைப் பார்க்கும் காட்சியகம் மற்றும் பார்வையாளர் நடைபாதை போன்ற நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு முன்னோடி முயற்சியாக, மாநில திட்டக்குழு நிதியிலிருந்து இம்முகாமில் 3.50 கோடி ரூபாய் செலவில் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) கொண்ட சூரிய சக்தியில் இயங்கும் மைக்ரோ-கிரிட் நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் 124 kWp சூரிய சக்தி ஆலை, 516 kWh பேட்டரி வங்கி மற்றும் 100 kW இன்வெர்ட்டர் ஆகியவை அடங்கும், இது யானை முகாம் மற்றும் 47 யானைப் பாதுகாவலர் வீடுகளுக்கு தடையற்ற பசுமை மின்சார விநியோகத்தை உறுதி செய்கிறது. மேகமூட்டமான அல்லது மழைக்காலங்களிலும் இந்த அமைப்பு இரண்டு நாட்கள் மின்னாற்றலை வழங்குகிறது, இது அக்கிராமத்தை பசுமை மின்சாரம், நிலையான வாழ்க்கை மற்றும் இயற்கையுடன் இணக்கமான ஒரு வாழ்க்கை மாதிரியாக மாற்றுகிறது. இது நாட்டில் புலிகள் காப்பக நிர்வாகத்தில் சிறந்த நடைமுறைகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

காவடி பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குதல்;

முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகியவற்றில் காலியாகவுள்ள காவடி பணியிடங்களை நிரப்பிடும் வகையில் 6 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பழங்குடியினரின் விலைமதிப்பற்ற பங்கை அங்கீகரித்து, பழங்குடி சமூகங்களிலிருந்து காவடிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு வாய்ப்புகளை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு சேவை விதிகளில் திருத்தம் செய்துள்ளது, இது அவர்களின் பாரம்பரிய நிபுணத்துவம் பாதுகாக்கப்பட்டு யானை மேலாண்மை நடைமுறைகளில் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்கிறது. இந்த நடவடிக்கை பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், கலாச்சார பாரம்பரியத்தையும் தலைமுறைகளுக்கு இடையேயான அறிவு பரிமாற்றத்தையும் பாதுகாக்கிறது.

இந்த நிகழ்ச்சியில், வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் துறை தலைவர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா, வனத்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.