மின் களப்பணியாளர்கள் விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் ஒரே நாளில் இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை: மின்வாரியம் தகவல்
சென்னை: மின் பணியாளர்களை பொறுத்தவரை தரை வழி கேபிள் சரிப்படுத்துதல், கம்பங்களை முறைப்படுத்துதல், சேதமடைந்த மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற உயிருக்கு ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவதால் இப்பணிகளில் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என மின்வாரியம் தரப்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக பல்வேறு மின் விபத்துகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளது மட்டுமின்றி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் மின்களப்பணியாளர்கள் முறையாக பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியாற்றுவதை மேற்பார்வையிட அனைத்து மண்டல பொறியாளர்களுக்கும் மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. பொதுவாக ஒரு ஊழியர்கள் விபத்தில் உயிரிழந்தால் அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் அரசால் வழங்கப்படுகின்றன. அதேபோல், இரண்டு கண்கள், கைகள் மற்றும் கால்களை இழந்தால் ரூ.3 லட்சமும், ஒரு கை,கால் மற்றும் கண்ணை இழந்தால் ரூ.1.50 லட்சமும் இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டுவருகின்றன.
இந்த தொகையை மண்டல தலைமை பொறியாளர் மூலமாக வழங்கப்படுகின்றன. ஆனால் இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் அந்த தொகைகளை வாங்க கால தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, சமீபத்தில் நடந்த உயர் அதிகாரிகள் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் விபத்தில் உயிரிழக்கும் மின்பணியாளர்களுக்கு உடனடி இழப்பீட்டு தொகையை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘ ஒரு ஊழியர் விபத்தில் இறந்தால் அவர் மின் விபத்தில் தான் உயிரிழந்தாரா அல்லது வேறு காரணம் உள்ளதா? என்பதை உறுதி செய்தும், விதிமுறைகளை பின்பற்றி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க தாமதமாகிறது. இதனை தவிரிக்க மின்விபத்தில் உயிரிழந்த பின்னர் அதனை உறுதி செய்த மறுநாள் இழப்பீடு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


