வாக்காளர்களின் குடியுரிமையை தீர்மானிக்க தேர்தல் பதிவு அதிகாரிகளுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி
புதுடெல்லி: வாக்காளர்களின் குடியுரிமையை தீர்மானிக்க தேர்தல் பதிவு அதிகாரிகளுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 11 மாநிலங்களில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் நேற்று 4வது நாளாக விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யாகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன் ஆஜராக வாதாடினார்.
அப்போது அவர் கூறுகையில்,’ குடியுரிமையை தீர்மானிப்பது தேர்தல் பதிவு அதிகாரிகளின் வேலை அல்ல என்பது மிகவும் தெளிவாக உள்ளது. ஒரு நபரின் குடியுரிமை சந்தேகத்திற்குரியது என்று அவர்கள் உணர்ந்தால், அவர்கள் செய்யக்கூடியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அதை பரிந்துரைப்பதுதான். அப்போதும் கூட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சரியான காரணங்களைப் பதிவு செய்ய வேண்டும். மேலும் அவர் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். குடியுரிமைச் சட்டத்தின் கீழ் ஒன்றிய உள்துறை அமைச்சகமாக இருந்தாலும் சரி, வெளிநாட்டினர் தீர்ப்பாயமாக இருந்தாலும் சரி, நீதிமன்றமாக இருந்தாலும் சரி, இந்த அதிகாரிகள் மட்டுமே அதைத் தீர்மானிப்பார்கள். ஒரு நபர் மனநிலை சரியில்லாதவராக இருந்தாலும், தேர்தல் ஆணையத்தால் தானாகவே வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க முடியாது.
ஆனால் வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமானோரை நீக்கி உள்ளனர். பீகாரில் எஸ்ஐஆர் அறிவிக்கப்பட்டபோது, வாக்காளர் பட்டியலில் 7.89 கோடி பெயர்கள் இருந்தன. ஆனால் வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டதும், தோராயமாக 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6 ஐப் பயன்படுத்தி நீக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயம் பலருக்கு எற்பட்டது. படிவம் 6 ஐ நிரப்ப, அவர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று தவறான அறிவிப்பை தாக்கல் செய்ய வேண்டும். இந்த முறையில் 21 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே மீண்டும் சேர்க்கப்பட்டனர்.
இந்தியா போன்ற ஏழை நாட்டில், ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாததால் குறைந்தது 25 சதவீத மக்களாவது நீக்கப்படுவார்கள். தேர்தல் ஆணைய நடைமுறையில் எந்த சமூக தணிக்கை நடத்தப்படவில்லை’ என்றார்.
மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி கூறுகையில்,’ விரைவான நகரமயமாக்கல். அடிக்கடி இடம்பெயர்வு போன்றவைதான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கான காரணங்கள் என்று தேர்தல் ஆணையம் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றார். இதை கேட்ட நீதிபதிகள்,’ வாக்காளர்களின் குடியுரிமையை தீர்மானிக்க தேர்தல் பதிவு அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை’ என்று கூறிய நீதிபதிகள் விசாரணையை டிசம்பர் 9 அன்று தள்ளிவைத்தனர்.
* பிஎல்ஓக்கள் மீதான அழுத்தத்தை குறைக்க கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும்
வாக்காளர் பட்டியல்களின் காலக்கெடு சிறப்பு திருத்தத்தில் ஈடுபட்டுள்ள பூத் நிலை அதிகாரிகள் எதிர்கொள்ளும் அதிகப்படியான பணி அழுத்தத்தை குறைப்பதற்காக கூடுதல் ஊழியர்களை நியமிப்பது குறித்து பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டது. தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படும் கூடுதல் கடமைகளில் அதிக சுமை உட்பட அவர்கள் சிரமங்களை எதிர்கொண்டால், மாநில அரசு அத்தகைய சிரமங்களைத் தவிர்க்க முடியும். எந்தவொரு ஊழியருக்கும் எஸ்ஐஆர் கடமையிலிருந்து விலக்கு கோருவதற்கு ஏதேனும் குறிப்பிட்ட காரணம் இருந்தால், உயர் அதிகாரி அத்தகைய கோரிக்கையை பரிசீலித்து, அத்தகைய ஊழியருக்கு பதில் வேறு ஊழியரை நியமிக்கலாம்’ என்றார்.

