திருச்சி: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேசிய கட்சிகள் எந்த மாநிலத்திற்கும் தேவையில்லை. அரசு பொதுத்துறை நிறுவனம் என எதுவும் தற்போது கிடையாது. அனைத்தையும் தனியாருக்கு தாரை வார்க்க இவர்கள் தலைவர்களா, இல்லை தரகர்களா என தெரியவில்லை. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எஸ்ஐஆர் தான் காரணம் என நானும் நினைக்கிறேன். ராகுல் காந்தி 60 முதல் 70 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக கூறி வருகிறார்.
எனவே நானும் அது போன்று நடந்திருக்கலாம் என நினைக்கிறேன். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விண்ணப்பம் மிக கடினமாக உள்ளது, தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினே இந்த விண்ணப்பங்கள் கடினமாக உள்ளது. படித்தவர்கள் இதை பூர்த்தி செய்வதே கடினம் எனக் கூறுகிறார். இப்படி இருக்க பாமர மக்கள் என்ன செய்வார்கள். போலி வாக்காளர்கள் உள்ளனர் என தேர்தல் கமிஷனுக்கு இப்போதுதான் தெரிகிறதா.
தேர்தலை அருகில் வைத்துக் கொண்டு இத்தனை நாள் என்ன செய்து கொண்டிருந்தனர். ஒரு வருடம் முன்பே செய்ய வேண்டிய பணிகளை தற்போது செய்தால் என்ன நியாயம். வாக்கு விடுபட்டால் விண்ணப்பிக்கும் நேரம் கூட தற்போது தமிழ்நாடு மக்களுக்கு இல்லை. கொளத்தூர் தொகுதியில் 4,500 போலி வாக்குகள் பதிவானதாக நிர்மலா சீதாராமன் கூறுகிறார். அப்படி இருந்தால், அந்த தேர்தல் செல்லாது என அவர் கூறியிருக்க வேண்டும்.
அதை ஏன் அவர் செய்யவில்லை. பொதுமக்களை தேர்தல் கமிஷன் பொழுதுபோக்காக பார்க்கிறது. பீகாரிலும் சிறுபான்மையினர் வாக்குகள் அதிகளவில் நீக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் பாஜவிற்குதான் வேலை செய்கிறது. இது அனைவருக்கும் நன்றாக தெரியும்.இவ்வாறு சீமான் கூறினார். பின்னர், நேற்றிரவு தஞ்சாவூர் பூதலூரில் நாதக சார்பில் தண்ணீர் மாநாடு நடந்தது. இதில் சீமான் கலந்து கொண்டு பேசினார்.


