தேர்தல் ஆணையத்தில் கொடுத்த 250 பக்க கடிதம் ‘சீக்ரெட்’ அதிமுகவினரிடம் பேசி வருகிறேன் பெயரை சொன்னால் ஆபத்து: செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
கோவை: அதிமுக உண்மையான அதிமுக இல்லை என தேர்தல் ஆணையத்திடம் 250 பக்க கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள விவரங்களை வெளியே சொல்ல முடியாது. அதிமுகவினரிடம் பேசி வருகிறேன். பெயரை சொன்னால் அவர்களுக்கு ஆபத்து வரும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவைக்கு செங்கோட்டையன் சென்றார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக உண்மையான அதிமுக இல்லை என தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இது குறித்து நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். அடுத்த கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள். நல்லதே நடக்கும்.
தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த கடிதத்தில் 250 பக்கம் இருக்கிறது. அதை வெளியில் சொல்ல முடியாது. அதில் முக்கியமான விஷயங்கள் இருக்கிறது. தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்து இருப்பதை வெளியில் சொல்லக்கூடாது என விதிகள் இருக்கிறது. அதிமுக குடும்ப கட்சியாக உள்ளது. உங்களுக்கு எல்லாம் தெரியும். மீடியாவில் வந்து கொண்டுதான் இருக்கிறது. அதை நான் சொல்ல தேவையில்லை. கட்சியில் மகன் தலையிடுகிறார். மைத்துனர் தலையிடுகிறார். மாவட்டத்தில் தொகுதிக்குள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றனர்.
எங்கெங்கு இயக்குகின்றனர் என்பது மீடியாவுக்கு தெரியாதது கிடையாது. இது மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறாக இருக்கும். மனோஜ் பாண்டியன் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைத்திருப்பது அது அவருடைய விருப்பம். இவ்வாறு அவர் தெரிவித்தனர். அதிமுக தலைவர்கள் திமுகவில் தொடர்ச்சியாக இணைந்து வருவது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘அதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்’’ செங்கோட்டையன் தெரிவித்தனர். அதிமுக தரப்பில் இருந்து யாராவது பேச்சுவார்த்தை நடத்துகின்றனரா?’’ என்று கேட்டபோது, ‘‘யார், யார் பேசுகின்றனர் என்பது அவர்களுக்கும், எனக்கும் தான் தெரியும். அதை வெளிப்படுத்தினால் அவர்களுக்கும் ஆபத்து இருக்கிறது’’ என்றார். ‘‘பேச்சுவார்த்தை நடப்பது உண்மையா?’’ என்றபோது, ‘‘உறுதியாக நடந்து வருகிறது’’ என்று கூறினார்.
* பாஜ இயக்குகிறதா?
‘53 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன் என்னை தனிபட்ட முறையில் யாரும் (பாஜ) இயக்க முடியாது. என்னை கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்’ என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
