Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராகுல் காந்தியின் கேள்விகளுக்குத் தேர்தல் ஆணையம் என்ன பதில் சொல்லப் போகிறது? -ஜவாஹிருல்லா கேள்வி!

சென்னை: ராகுல் காந்தியின் கேள்விகளுக்குத் தேர்தல் ஆணையம் என்ன பதில் சொல்லப் போகிறது? என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியும் தேர்தல் ஆணையமும் இணைந்து மிகப்பெரிய தேர்தல் மோசடி செய்துள்ளதாக நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருப்பதோடு அதனை அம்பலப்படுத்தியும் இருக்கிறார்.  பெங்களூரு மத்தியத் தொகுதியில் ஒரு லட்சத்து 250 போலி வாக்குகளை உருவாக்கி வெற்றி பெற்றதாக அவர் தெரிவித்திருப்பதைப் புறம் தள்ள முடியாது.

வாக்காளர் பட்டியலில் ஐந்து வகையான மோசடிகள் நடந்திருப்பதை திரு. ராகுல் காந்தி அம்பலப்படுத்தி இருக்கிறார்.

-போலி வாக்காளர்கள்

-ஒரே நபரின் பெயரில் பல வாக்குச்சாவடிகளில் வாக்குகளைச் சேர்த்திருப்பது

-போலியான செல்லாத முகவரிகள் அல்லது சரி பார்க்க முடியாத வாக்காளர்கள்

-புதிய வாக்காளர்களை சேர்ககும் படிவம் 6ஐ முறைகேடாகப் பயன்படுத்துதல்

-சிறிய வீட்டில் பல குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வாக்காளர்கள்

ஒரு தொகுதியில் மட்டும் நடந்த மோசடிகளை காட்சிப்படுத்தியிருக்கும் ராகுல் நாடுமுழுவதும் பெரிய அளவில் இந்த மோசடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதைப் புறந்தள்ள முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

தேர்தல் ஆணையத்தை நோக்கி ராகுல் காந்தி எழுப்பி இருக்கும் கேள்விகளுக்குத் தேர்தல் ஆணையம் என்ன பதில் சொல்லப் போகிறது? மராட்டியத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற ஐந்து மாதங்களுக்கு பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. ஐந்து மாதங்களுக்குள் பல லட்சம் வாக்காளர்கள் அம்மாநிலத்தில் சேர்க்கப்பட்டது எப்படி என்று ராகுல் காந்தி வினவியுள்ளார்.

பீகார் தேர்தலிலும் இதுபோன்ற மோசடியாக வாக்காளர்கள் சேர்க்கப் பட்டிருக்கின்றனர். உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருக்கின்றனர் என்று அங்கிருக்கும் எதிர்க்கட்சிகள் கூறும் புகார்கள் புறந்தள்ளத்தக்கது அல்ல. ஜனநாயகத்தின் ஆணிவேர் அனைவருக்கும் சமமான வாக்குரிமை. தேர்தல் ஆணையமும் பாஜகவும் ஜனநாயகத்தின் ஆணிவேரை அசைத்துள்ளது என்பது ராகுல் காந்தியின் தரவுகளால் புலப்படுகிறது. ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் ஓர் அணியில் இணைந்து தேர்தல் ஆணையத்தைத் தகுந்த வகையில் திருத்த வேண்டிய நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.