தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் SIR விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மேலும் அவகாசம் நீட்டிப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான (SIR) படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (டிசம்பர் 11) முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மேலும் 3 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் டிச.14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19ஆம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய தேர்தல் ஆணையம் மூலம் நாடு முழுவதும் முதல்கட்டமாக பீகார் மாநிலத்தில் எஸ்ஐஆர் (Special Intensive Revision) பணியைத் தொடங்கியது. அவசர அவசரமாக அங்கு வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணி நடைபெற்றது. அதன்மூலம் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கிடையில் இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உட்பட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் SIR பணி தொடங்கப்பட்டது
தமிழகத்தில் கடந்த நவம்பர் 4 அன்று எஸ்ஐஆர் (SIR) பணி தொடங்கப்பட்டது. ஆனால் ஒரு மாதம் இடைவெளியில் எப்படி வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணி மேற்கொள்வது? மற்றும் பணி அழுத்தத்தில் இருப்பதாக பூத் நிலை அதிகாரிகள் (BLO) பலத்த குற்றச்சாட்டுகள் வைத்த நிலையில், தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறையை ஒரு வாரம் நீட்டித்தது. அதாவது விண்ணப்பங்களைப் பெறுவதற்கான தேதி டிசம்பர் 11 வரை நீட்டிக்கப்பட்டது. முன்னர் அறிவிக்கப்பட்ட காலக்கெடு டிசம்பர் 4 என்பது குறிப்பிடத்தக்ககது.
பூர்த்தி செய்யப்பட்ட SIR விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடையா இருந்த நிலையில் மேலும் 3 நாட்கள் வகாசம் வழங்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு, குஜராத் மாநிலங்களுக்கு டிசம்பர் 14ம் தேதி வரையும் மத்திய பிரதேசம், சண்டிகர் மாநிலங்களுக்கு, அந்தமான்-நிக்கோபாரில் டிசம்பர் 18ம் தேதி வரையும் உத்திரபிரதேசத்துக்கு டிசம்பர் 26ம் தேதி வரையும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


