Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேர்தல் வழக்குகளை விரைந்து முடிக்கக்கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தேர்தல் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவை, மக்களவை தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்களை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் தேர்தல் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி சென்னை உயர் நதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில்,‘தேர்தல் வழக்குகளை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் தெரிவிக்கிறது. உச்ச நீதிமன்றமும் இதுகுறித்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இந்த சட்டத்தின்படி குறித்த காலத்தில் தேர்தல் வழக்குகள் முடிக்கப்படாமல் உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இது தேர்தலின் புனிதத்தையும், ஜனநாயக நடைமுறையும் வீழ்த்தும் வகையில் உள்ளது. அதனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவை கண்டிப்புடன் பின்பற்றி தேர்தல் வழக்குகளை ஆறு மாதங்களுக்குள் முடிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்,’ என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, தேர்தல் வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் சிறப்பு அமர்வாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் வழக்கை தாக்கல் செய்தவர்கள் சம்பந்தப்பட்ட நீதிபதி முன்பு வழக்கை விரைந்து முடிக்கக்கோரி முறையிடலாம். மாறாக, சக நீதிபதிகளுக்கு இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.