சென்னை: கடந்த வெள்ளிக்கிழமை அன்று உளவுத்துறை டிஜிபிக்கு ஆந்திராவிலிருந்து சுமார் 1,000 கிலோ கஞ்சாவை கடத்தி சென்னைக்கு கொண்டுவர உள்ளதாக ரகசிய தகவல் வந்துள்ளது. இதை தொடர்ந்து 3 நாட்களாக எளாவூர் சோதனைச்சாவடி, தடா, சூலூர்பேட்டை, நெல்லூர் ஆகிய இடங்களில் மத்திய போதைப்பொருள் தடுப்பு இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் சாமி தலைமையிலான தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் நோட்டமிட்டு வாகன சோதனை மேற்கொண்டனர்.
நேற்று தடா பகுதியில் உள்ள தாபா ஒன்றில் சந்தேகப்படும்படி மினி லாரி மற்றும் சொகுசு காரில் ஒரு கும்பல் வந்துள்ளது. எளாவூர் சோதனைச்சாவடியில் கார், மினி லாரியை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அதில், விளையாட்டு உபகரணங்கள் இருந்துள்ளன. அந்த பொருட்களை போலீசார் சோதனை செய்தபோது ரூ.3 கோடி மதிப்பிலான 590 கிலோ எடைகொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டி (27), ஷேக் அப்துல்லா (30), ராமநாதன் (35), தஞ்சாவூரைச் சேர்ந்த வினோத் (32), கோயம்புத்தூரைச் சேர்ந்தவ பாரதி (33), மணிகண்டன் (34) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள் 6 பேரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.