கும்மிடிப்பூண்டி: சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை யில் கணக்கில் வராத ரூ.3.54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சோதனை சாவடி அதிகாரிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி வழியாக பீகார், ஒடிசா, ஆந்திரா, ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆந்திரா வழியாக சென்னைக்கும், சென்னையில் இருந்து ஆந்திரா வழியாக மேற்கண்ட மாநிலங்களுக்கும் உணவு பொருட்கள், ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் மற்றும் ராக்கெட் தளவாடங்கள், காற்றாலை உதிரிபாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தினந்தோறும் இலகு மற்றும் கனரக வாகனங்கள் மூலம் எடுத்து செல்லப்படுகிறது.
இந்த வழியாக வரும் ஒவ்வொரு வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு பர்மிட் தொகை செலுத்துவது, அதிகளவு பாரம் ஏற்றி வந்தால் அபராதம் வசூலிப்பது மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருள் கடத்திவருபவர்களை கைது செய்து வருகின்றனர். இதற்கிடையில், சோதனை சாவடியில் தடை செய்யப்பட்ட போதை பொருள் மற்றும் அதிக பாரம் ஏற்றி வரும் வாகன உரிமையாளர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு விட்டுவிடுவதாக புகார் எழுந்தது.இந்த நிலையில் அடுத்த வாரம் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை வருவதால் பல்வேறு லாரி உரிமையாளர்கள், டிரான்ஸ்போர்ட் நிறுவன தொழிலதிபர்கள் சோதனை சாவடி அதிகாரிகளுக்கு லஞ்ச பணம், பரிசு பொருள் கொடுக்க இருப்பதாக திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசனுக்கு புகார்கள் வந்தன.
புகாரின் அடிப்படையில், டிஎஸ்பி கணேசன் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, மாலா, விஜயலட்சுமி, மாவட்ட ஆய்வுத்துறை அலுவலர் கமலக்கண்ணன் ஆகியோர் இன்று அதிகாலை ஆந்திராவுக்கு செல்லும் சோதனை சாவடி, சென்னை நோக்கி செல்லும் சோதனை சாவடி இரண்டிலும் திடீரென சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத 3 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து எளாவூர் சோதனை சாவடியில் பணியாற்றும் துணை ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் வந்த கார், ஆட்டோவை சோதனை செய்தனர். இதில், தங்களது உறவினர் பெயரில் கார்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக டிஎஸ்பி கணேசன் தலைமையில் சோதனை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.