சென்னை: தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கையை உருவாக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் எம்.பி, நேற்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
வசதி படைத்தவர்களுக்கு கிடைப்பதை விட, தரமான கல்வி எளிய பின்புலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடனும், மாறி வரும் உலகின் புதிய சவால்களை எதிர்கொள்ள தேவையான திறன்களுடன் நமது மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடனும், தமிழ்நாடு அரசின் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த கல்விக்கொள்கை சமத்துவத்தையும், சமூகநீதியையும் சேர்த்தே போதிக்கிறது. குறிப்பாக, மாணவர்களை அச்சத்திலேயே ஆழ்த்தி வைக்கும் தேவையற்ற பொது தேர்வுகள் நீக்கப்பட்டு இருப்பதும், அநீதியான நுழைவு தேர்வுகளுக்கு எதிரான அம்சங்கள் இடம்பிடித்து இருப்பதும், இருமொழி கொள்கையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதும் பாராட்டுக்குரியவை.
‘அனைவருக்கும் தரமான கல்வி’ என்ற இலக்குடன் செயலாற்றி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கையை வடிவமைத்த டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையிலான குழுவினர் ஆகியோரை மனமார பாராட்டுகிறேன். இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.