சென்னை: காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்யும் போதெல்லாம் குழந்தைகளின் வயிறு நிறைகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். குழந்தைகளின் அறிவு வளர்கிறது; பெற்றோர்களின் மனதில் மகிழ்ச்சி மலர்கிறது. தமிழ்நாடு, பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் குழந்தைகளின் வருகை அதிகரித்துள்ளது.
காலை உணவுத் திட்டத்தில், இனி 20 இலட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள். நீதிக்கட்சி முதல் நமது திராவிட மாடல் அரசு வரை பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து வயிற்றுப்பசியைப் போக்கி, அறிவுப்பசிக்குக் கல்வி வழங்குகிறோம். இது உணவு மட்டுமல்ல; உயர்வுக்கான உரம்!
வரும் 26-08-2025 அன்று நகர்ப்புறங்களிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் முதலமைச்சர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்கிறோம். நாட்டுக்கே முன்னோடியாகத் திகழும் நமது பணிகள் தொடரும்! தமிழ்நாடு நாளும் உயரும்!
காலை உணவுத் திட்டத்தை நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யவிருக்கிறோம். வருகிற 26-ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைக்கிறேன். இதன் மூலம் நகர்ப்புறம் சார்ந்த 2,429 பள்ளிகளில் 3,06,000 மாணவர்கள் பயன் பெறுவர்.