ராணிப்பேட்டை: எடப்பாடி பழனிசாமிக்கு நாவடக்கம் வேண்டும் என்று செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்து உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆய்வு செய்த பிறகு செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ சித்தாந்தம் வேறு, காங்கிரஸ் கட்சியினுடைய சித்தாந்தம் வேறு. அவர்களுடன் இருந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி எங்களை விமர்சனம் செய்கிறார். அற்புதமான தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக. பின்னர், அதிமுகவை தூக்கி நிறுத்தியவர் ஜெயலலிதா. எடப்பாடி பழனிசாமி அதிமுகவை தற்போது சின்னா பின்னமாக வைத்துள்ளார் என கூட்டணி கட்சியை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிமுக மூழ்குகின்ற கப்பலாக உள்ளது. அதில் இருந்து பலர் ஓடுகின்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சி அப்படிப்பட்ட கட்சி அல்ல. யார் என்ன சொன்னாலும் மேலிடத்தில் தகவல் தெரிவித்து, அதற்கான பதிலை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்வார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி வாய்க்கு வந்ததெல்லாம், பொது வெளியில் ஒரு பிச்சைக்காரர் என்று, என்னை இழிவுபடுத்துகின்ற நினைப்பில், விளிம்பு நிலையில் உள்ள வெகுஜன மக்களை இழிவுபடுத்துகிறார். இதை தான் எம்ஜிஆர், ஜெயலலிதா சொல்லிக் கொடுத்தார்களா?
கோயிலில் நேர்த்திக்கடனுக்காக மடிப்பிச்சை எடுப்பவர்களை கேவலப்படுத்துவாரா? தலைவருக்கான மாண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவரை பார்த்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவரை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அதிமுக அமித்ஷா அதிமுகவாக மாறி உள்ளது. நாங்கள் எல்லாம் வெளியே சென்று யாரையாவது சந்தித்தால் முகத்தை மூடிக்கொண்டா வருகிறோம். எடப்பாடி பழனிசாமிக்கு நாவடக்கம் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
* எடப்பாடி படத்தை எரிக்க முயற்சி
செல்வப்பெருந்தகையை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமியை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் வண்ணார்பேட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒருகட்டமாக, எடப்பாடி பழனிச்சாமி உருவ படத்தை துடைப்பத்தால் அடித்து, தீயிட்டு எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பாளை போலீசார், உருவ படத்தை எரிக்க விடாமல் தடுத்தனர். இதையடுத்து எடப்பாடி படத்தை காங்கிரசார் ஆவேசமாக கிழித்து எறிந்தனர்.
* செல்வப்பெருந்தகை குறித்து அவதூறு எடப்பாடி சுற்றுப்பயணத்துக்கு தடை விதிக்க வேண்டும்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காங்கிரஸ் புகார்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை பற்றி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுமென்றே தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்குக்கும் குந்தகம் ஏற்படும் வகையில் பரப்புரை செய்து வருகிறார். ஊட்டியில் நேற்றுமுன்தினம் நடந்த பரப்புரையில் பொதுமக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை பற்றி வேண்டுமென்று அவதூறு மற்றும் அருவருக்கத்தக்க வகையில் பேசி உள்ளார். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மற்றும் பொது அமைதியைக் கெடுக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்திலும் மற்றும் தனிமனித தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளார். ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுத்து, அவருடைய பரப்புரை மற்றும் சுற்றுப்பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.