Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பிரச்சாரத்துக்கு நீதிமன்றம் தடை எதிரொலி; குமாரபாளையம், திருச்செங்கோட்டில் எடப்பாடி பிரசாரம் நடைபெறுமா?.. நீதிமன்ற உத்தரவை நாளை மீறத் திட்டம் என்பதால் பரபரப்பு

சென்னை: தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பிரச்சாரத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் நாளை தேசிய நெடுஞ்சாலைகளில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்வார் என்று அதிமுக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நீதிமன்ற உத்தரவை மீறி அவர் பிரச்சாரம் செய்வாரா அல்லது பொதுக்கூட்டம் நடத்துவாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. கரூரில் கடந்த 27ம் தேதி தவெக பிரச்சாரம் நடந்தது. அதில் விஜய் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சாலைகளில் பொதுமக்கள் சந்திப்பை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.

அப்போது, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக பிரச்சாரம் செய்ய ஏன் அனுமதிக்கிறீர்கள் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அப்போது அரசு வக்கீல், நெடுஞ்சாலைகளில் மக்கள் சந்திப்பை நடத்த தடை விதிப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. விரைவில் இது குறித்து முடிவு எடுக்கப்படும். அதுவரை நெடுஞ்சாலைகளில் பிரச்சாரம் நடத்த அனுமதி அளிக்கப்படாது என்று தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அரசு வக்கீல் தெரிவித்ததை பதிவு செய்து கொண்டதோடு, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பிரச்சாரம் நடத்த நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. அதேநேரத்தில், நடிகர் விஜய் போன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் பஸ்சில் இருந்தபடியே பொதுமக்களை சந்தித்து வருகிறார். அவர் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பயணித்து மக்களை சந்தித்து வருகிறார்.

அவர் தொடர்ந்து 150 தொகுதிகளுக்கு மேல் பிரசாரம் செய்துள்ளார். நேற்று அவர் தர்மபுரியில் பிரச்சாரம் செய்திருந்தார். இந்தநிலையில் இன்று ஓய்வுக்கு பிறகு நாளை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய இரு இடங்களில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அந்த இரு ஊர்களிலுமே சாலைகளில்தான் மாநில நெடுஞ்சாலைகளில்தான் பிரச்சாரம் செய்து, பொதுமக்களை சந்திக்கிறார். இந்த மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் நீதிமன்றம் நேற்றுத்தான் நெடுஞ்சாலைகளில் பிரசாரம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இன்று அவர் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. நாளைதான் திருச்செங்கோடு, குமாரபாளையத்தில் நெடுஞ்சாலைகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதனால், அவரது பிரச்சாரத்துக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்வது குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், நீதிமன்ற உத்தரவை மதித்து அவரே பிரசாத்தை ரத்து செய்து விட்டு பொதுக்கூட்டங்களில் மட்டும் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் நீதிமன்ற உத்தரவை ஏற்று மக்கள் சந்திப்பை ரத்து செய்து விட்டு, பொதுக்கூட்டங்களில் பேசுவாரா? அல்லது நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் மக்கள் சந்திப்பை நடத்துவாரா என்ற பரபரப்பு தற்போது அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.