Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அமலாக்கத்துறைக்கு எதிராக சென்னை ஐகோர்ட் அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி : டாஸ்மாக் வழக்கில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிரான நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. டாஸ்மாக் தொடர்பான வழக்கில், ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்தது. இதை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அவரிடமே திரும்ப ஒப்படைக்குமாறும், அவர் மீது மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் வரும் 5ம் தேதி விசாரணைக்கு வரவிருப்பதால், உச்சநீதிமன்ற விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் கோரப்பட்டது.

இதற்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதுகுறித்து ஆகாஷ் பாஸ்கரன் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை விடுமுறை காலத்திற்குப் பிறகு ஒத்திவைத்தனர். அப்போது குறுக்கிட்ட அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர், ‘இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்படுவதால், அதுவரை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.