புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் தற்போதுள்ள நிலவரம் குறித்து இந்தியா- சீனா இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக சீனா தெரிவித்துள்ளது. இந்திய எல்லையான கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு மே 5ம் தேதி இந்திய, சீன ராணுவத்தினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீன வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். அப்போது முதல் இந்தியா - சீனா எல்லை பிரச்னை நீடித்து வந்தது. இதன் தொடர்ச்சியாக கிழக்கு லடாக்கில் உள்ள டெப்சாங், டெம்சோக் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியாவும், சீனாவும் தங்கள் நாட்டு வீரர்களை நிறுத்தி வந்தனர்.
இதனால் இருநாடுகளிடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டதால் எப்போதும் பதற்றமான சூழல் நிலவி வந்தது. இதுதொடர்பாக கடந்த 2024ம் ஆண்டு இந்தியா சீனா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து இருநாடுகளும் கிழக்கு லடாக் பகுதியில் இருந்து தங்கள் நாட்டு வீரர்களை திரும்ப பெற்றனர். இந்த நடவடிக்கை தொடங்கி கடந்த 25ம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெற்றது.
இந்நிலையில், கிழக்கு லடாக்கில் தற்போதுள்ள நிலவரம் குறித்து இந்தியா- சீனா இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன பாதுகாப்பு அமைச்சகம் வௌியிட்ட அறிவிப்பில், “கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவது குறித்து இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடந்த 25ம் தேதி மார்தோ ஷூசுவேல் எல்லைப்பகுதியில் நடந்த 23வது ஜெனரல் நிலை பேச்சுவார்த்தையில், சீனா இந்தியா எல்லையின் மேற்கு பகுதியை நிர்வகிப்பது குறித்து இருதரப்பினரும் ஆழமான மற்றும் ஆக்கப்பூர்வமான கருத்துகளை பரிமாறி கொண்டன. மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் வழிகாட்டுதல்களின்படி இருதரப்பினரும் பேச்சுவார்த்தையை தொடர முடிவு செய்துள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சந்திப்புகள் குறித்து இந்திய அதிகாரிகள் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வௌியிடவில்லை.
