பெரம்பூர்: மூலகொத்தளம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஸ்ரீ (20), மெக்கானிக். இவர், நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் வியாசர்பாடி பி.வி.காலனி 23வது தெரு அருகில் நடந்த தசரா திருவிழாவை பார்க்க சென்றுள்ளார். அங்கு, சாமி வேடமிட்ட நபர்களை செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்தார். அப்போது 2 பேர், ஸ்ரீயிடம் செல்போனை கேட்டுள்ளனர்.
கொடுக்க மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்ரீ, தனது பைக்கை எடுக்க சென்றபோது அவரை சரமாரி கத்தியால் வெட்டியுள்ளனர். பலத்த காயமடைந்த ஸ்ரீயை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில், எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வியாசர்பாடி அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த திலீப்குமார் (20), லோகேஷ் (20), திருநாவுக்கரசு (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
விசாரணையில், திருநாவுக்கரசுவின் தங்கைகளை ஸ்ரீ, தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனால் கோபமடைந்து செல்போனை கேட்டபோது கொடுக்காததால் 3 பேரும் கத்தியால் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.