Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

துபாய் விமான கண்காட்சியில் பலியான தேஜாஸ் விமானி நமன்ஸ் சியால் உடல் இமாச்சலில் தகனம்: கோவையில் தமிழக அரசு சார்பில் கலெக்டர், எஸ்பி அஞ்சலி

சிம்லா: துபாய் விமான கண்காட்சியில் பலியான தேஜாஸ் போர் விமானியின் உடல் நேற்று கோவை சூலூர் விமானப்படைத்தளத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கோவை கலெக்டர், எஸ்பி ஆகியோர் நேரில் மலரஞ்சலி செலுத்தினர். பின்பு சொந்த ஊரான இமாச்சல் பிரதேசத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு முழு ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

துபாயில் கடந்த 2 நாட்களுக்கு முன் நடைபெற்ற சர்வதேச விமான கண்காட்சியில் சாகச நிகழ்ச்சியின் போது கோவை சூலூர் விமானப்படை தளத்தைச் சேர்ந்த தேஜாஸ் போர் விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி வெடித்து தீப்பற்றி எரிந்து சேதமானது. இந்த விபத்தில், விமானத்தை இயக்கிய இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த விங் கமாண்டர் நமன்ஸ் சியால் உயிரிழந்தார்.

பலியான விமானியின் மனைவி சூலூர் விமானப் படைத்தளத்தில் விமானப்படை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 6 வயதில் மகள் உள்ளார். இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் சூலூர் விமானப்படை தளத்தில் உள்ள விமானப்படை அதிகாரிகள் குடியிருப்பில வசித்து வந்தனர். இதனால் வீர மரணம் அடைந்த விமானி நமன்ஸ் சியால் உடல் உடல் நேற்று அதிகாலை 3 மணியளவில் சூலூர் விமானப் படைத்தளத்திற்கு தனி விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.

பின்னர் அவரது உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டு அவரது உருவப்படம் வைக்கப்பட்டு அதன் முன்பு அவர் அணிந்திருந்த தொப்பி வைக்கப்பட்டது. அங்கு, தமிழக அரசு சார்பில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், எஸ்பி கார்த்திகேயன் மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகள் அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் விமானியின் உடல் அதே விமானத்தில் அவரது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசம் எடுத்துச் செல்லப்பட்டது.

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள காகல் விமான நிலையத்தில் இருந்து நமன்சின் சொந்த ஊரான காங்க்ரா மாவட்டத்தில் உள்ள படியல்கர் கிராமத்திற்கு ராணுவ வாகனத்தில் உடல் கொண்டு செல்லப்பட்ட போது சாலையின் இரு பக்கங்களிலும் நுாற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர். அவரது காதல் மனைவி அப்சானும் இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக பணியாற்றி வருகிறார்.

விமானப்படை சீருடையில் இருந்த அப்சான் கண்ணீர்விட்டு அழுதபடி கணவரின் உடலுக்கு சல்யூட் அடித்து இறுதி மரியாதை செலுத்தினார். அருகில் அவரது 6 வயது மகள் கதறி அழுதபடி நின்றிருந்தது காண்போர் நெஞ்சை உருக்கியது. பின்னர் இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் முழு ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

* நமன்ஸ் சியாலுக்கு வீரவணக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘விங் கமாண்டர்’ நமன்ஸ் சியாலுக்கு வீரவணக்கம்! அவரது உடல் கோவைக்குக் கொண்டுவரப்பட்ட காட்சிகளைக் கண்டு கலங்கினேன். கோவை சூலூர் விமானப்படை தளத்தில் பணிபுரிந்த அவருக்குத் தமிழ்நாடு தனது அஞ்சலியைச் செலுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.