துபாய்: துபாய் விமான கண்காட்சியில் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார்.
சூரியகிரண் ஏரோபாட்டிக் குழு மற்றும் எல்சிஏ தேஜாஸுடன் விமான கண்காட்சியில் பங்கேற்பதாக இந்திய விமானப்படை அறிவித்திருந்தது. ஜெட் விமானங்கள் கடந்த வாரம் அல் மக்தூம் விமான தளத்தில் தரையிறங்கின. 100க்கும் மேற்பட்ட விமானப்படைகளின் பங்கேற்புடன் நடைபெறும் இந்த உலகளாவிய நிகழ்வில் விமானத்தின் இயங்குதன்மை, செயல்பாட்டுத் திறன் மற்றும் இராணுவ மற்றும் வணிக ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் துபாய் விமான கண்காட்சி எமிரேட்ஸின் 40வது ஆண்டு விழாவில் நடைபெற்று வருகிறது. 150 நாடுகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் பிரமாண்டமான விமான கண்காட்சிக்காக துபாய்க்கு வந்துள்ளனர். இதில், ஒம்பார்டியர், டசால்ட் ஏவியேஷன், எம்ப்ரேயர், தேல்ஸ், ஏர்பஸ், லாக்ஹீட் மார்டின் மற்றும் காலிடஸ் போன்ற முன்னணி விண்வெளி நிறுவனங்கள் பங்கேற்றன. துபாய் விமான கண்காட்சி நவம்பர் 17 ஆம் தேதி தொடங்கி, இன்றைய தினம் 21ம் தேதி முடிவடையும் என்று திட்டமிடப்பட்டது.
இந்த நிலையில், துபாயில் நடந்த விமானக் கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கியது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:10 மணியளவில் விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் கட்டுப்பாட்டை இழந்ததும் எரிபொருளை கொட்ட விமானியால் இயலவில்லை. இதனால் தேஜஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சுழன்று தரையில் மோதி வெடித்து தீப்பிடித்தது. இத்தகைய தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தியாவைச் சேர்ந்த HAL நிறுவனம் தேஜஸ் போர் விமானத்தை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.


