புதுடெல்லி: பிரபல தொலைக்காட்சி நடிகர் ஆஷிஷ் கபூர், பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ஆண்மைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் பிரபலமான நடிகர் ஆஷிஷ் கபூர் (39) மீது, டெல்லியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். அந்தப் புகாரில், விருந்து நிகழ்ச்சி ஒன்றில் தனது பானத்தில் போதை மருந்து கலந்து, ஆஷிஷ் கபூர் மற்றும் அவரது நண்பர்கள் தன்னை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதனை காணொலியாகப் பதிவு செய்து மிரட்டியதாகவும், அப்போது ஒரு பெண்ணும் தன்னைத் தாக்கியதாகவும் முதலில் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக இருந்த ஆஷிஷ் கபூரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். கோவாவில் பதுங்கியிருந்த அவர், போலீசார் நெருங்குவதை அறிந்து அங்கிருந்து தப்பி, புனேவில் உள்ள தனது நண்பர் வீட்டில் தங்கியிருந்தபோது கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். இதனிடையே, புகார் அளித்த பெண் தனது வாக்குமூலத்தை மாற்றியுள்ளார். ஆஷிஷ் கபூர் மட்டுமே தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தற்போது தெரிவித்துள்ளார்.
இதனால், இந்த வழக்கு கூட்டுப் பாலியல் பலாத்காரத்தில் இருந்து, தனிப்பட்ட பாலியல் பலாத்கார வழக்காக மாற்றப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஆஷிஷ் கபூர், டெல்லி திஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆண்மைப் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டார். இந்தப் பரிசோதனை அறிக்கை, வழக்கின் முக்கிய ஆதாரமாக அமையும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.