போதைப்பொருள் தொடர்பாக இபிஎஸ் பதிவிட்டதை எதிர்த்து வழக்கு ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆவணங்கள் தாக்கல்: மாஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு
சென்னை: போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி எடப்பாடி பழனிசாமி பேசியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் சாட்சி விசாரணைக்காக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஆவணங்களை தாக்கல் செய்தார். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கை டெல்லி போலீசார் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்தனர்.
இந்நிலையில், திமுகவுடன் ஜாபர் சாதிக்கை தொடர்புபடுத்தி அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருவதால் ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்க உத்தரவிட கோரி திமுக தரப்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சாட்சி விசாரணையை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் மாஸ்டர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதற்காக நேரில் வந்து ஆவணங்களை தாக்கல் செய்தார். அப்போது எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் கவுதம் கால அவகாசம் கோரினார். இதையடுத்து மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி வழக்கின் சாட்சி விசாரணையை அக்டோபர் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.