சென்னை: போதை பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த்தை கடந்த ஜூன் 23ம் தேதி சென்னை போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக கடந்த மாதம் 28 ம் தேதி நடிகர் காந்த் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் தனது உடல் நிலையை காரணம் காட்டி அன்று நேரில் ஆஜராகவில்லை.
பின்னர் நடிகர் ஸ்ரீகாந்துக்கு இரண்டாவது முறையாக நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படிஸ்ரீகாந்த் நேற்று காலை 10 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அப்போது போதை பொருள் வாங்க கானா நாட்டு ஏஜெண்ட் ஜான் மற்றும் முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் ஆகியோருக்கு பணம் அனுப்பிய விபரங்கள் குறித்தும், சினிமா முன்னணி நடிகைகள் பலர் ஜிபே மூலம் பணம் அனுப்பியது தொடர்பான ஆவணங்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டது. 50க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டனர். அதற்கு நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த பதிலை அமலாக்கத்துறை அதிகாரிகள் வாக்குமூலமாக பதிவு செய்தனர். விசாரணை நேற்று காலை 10 மணி முதல் இரவு வரை நீடித்தது.
