புதுக்கோட்டை: புதுக்கோட்டையை சேர்ந்த திருநங்கை இந்தியாவின் முதல் ட்ரோன் பைலட்டானார். புதுக்கோட்டையை சேர்ந்தவர் திருநங்கை ஷிவானி (40). பட்டதாரியான இவர், திருநங்கைகள் நல சங்க செயலாளராக உள்ளார். கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள ரிமோட் ட்ரோன் பைலட் சென்டர் மூலம் நபார்டு வங்கி நிதி உதவியின் கீழ் ‘ட்ரோன் பைலட்’ பயிற்சியை ஷிவானி முடித்தார். தமிழக அரசின் புத்தொழில் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க பதிவு செய்து, ரூ.5 லட்சம் பெறும் தொழில் முனைவோராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து புதுக்கோடடை நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி அலுவலர் தீபக் குமார் கூறுகையில், தற்போது ட்ரோன் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனினும், திருநங்கை ஒருவர் இத்தொழிலை தொடங்குவது இந்தியாவில் இதுதான் முதன் முறை. ஷிவானிக்கு தேவையான ட்ரோன் தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றார்.
+
Advertisement