Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2026ம் ஆண்டிலும் திராவிட மாடல் 2.0 அமைய வேண்டும் தேர்தல் வரை ஓய்வை மறந்து உழைப்போம்: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக நடந்தது. இதில் பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் கனிமொழி, முதன்மை செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில், படுபாதாளத்துக்குப் போன தமிழ்நாட்டின் வளர்ச்சியை மீட்டெடுத்து, 11.19 விழுக்காட்டு வளர்ச்சியோடு, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக நம் திராவிட மாடல் ஆட்சியில் உயர்த்தியிருக்கிறோம். இதன் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு அடித்தளமிடுவதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றேன். இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன், இது ‘ஹிட்’ அடிக்கும் என்று சொன்னேன். சொன்ன மாதிரியே, 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்து ‘சூப்பர் ஹிட்’ அடித்துள்ளது.

தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை நாம் விரைந்து அடைய வேண்டும் என்றால்-இந்த பயணங்களில் வெற்றியடைந்தால் மட்டும் போதாது. வரவிருக்கும் 2026 தேர்தலிலும் மாபெரும் வெற்றியைப் பெறவேண்டும்.இதற்கான அடித்தளமாகத்தான், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பைக் கடந்த ஜூலை மாதம் 3ம் நாள் தொடங்கினோம். சர்வாதிகார மனப்பான்மையோடு தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக, தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்க, தமிழ்நாட்டு மக்களை ஒன்றிணைக்க நீங்கள் எல்லோரும் களத்தில் சிறப்பாகப் பணியாற்றினீர்கள்.

மக்களின் நம்பிக்கையைப் பெற களத்தில் பணியாற்றிய அத்தனை நிர்வாகிகளிடமும், நான் பாராட்டினேன் என்று சொல்லுங்கள். ஏனென்றால், நான் மகிழ்ச்சியோடு சொல்றேன். ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களை ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைத்துள்ளோம். உங்கள் எல்லாருக்கும் ஏன், உங்கள் மூலமாக திமுகவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சொல்கிறேன். தேர்தல் முடியும் வரைக்கும் “ஓய்வு” என்ற சொல்லையே மறந்துவிடுங்கள்.

ஏனென்றால், 2026ல் நாம் பெறப்போகும் வெற்றி, திமுகவுக்கான வெற்றி மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கான வெற்றி. எப்படிப்பட்ட ஆபத்துகள் தமிழ்நாட்டைச் சூழ்ந்திருக்கிறதென்று சாதாரணமாக டீக்கடையில் பேப்பர் படிப்போர் கூட உணர்ந்திருக்கிறார்கள். பேக் நியூஸ்-டைவர்ஷன் பாலிட்டிக்ஸ்-என்று மக்களைக் குழப்ப எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்; அதுதான் அவர்களால் முடியும்.

மக்களை ஒன்றிணைத்து, அவர்களின் துணையோடு தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்க நம்மால் தான் முடியும். அதற்கான வலிமையை நாம் பெறப்போகும் நாள்தான், வரும் செப்டம்பர் 17. முப்பெரும் விழா. அதற்கு முன், நம்மையெல்லாம் ஆளாக்கிய அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ம் நாள், 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும்-அந்தந்த வாக்குச்சாவடிகளில் இணைந்த குடும்பங்களை அழைத்து, பிஎல்ஏ, பிடிஏ, பிஎல்சி-களின் கூட்டங்களை நடத்த வேண்டும். இது நிறைவு விழா கூட்டம் இல்லை; இதுதான் தொடக்கவிழா கூட்டம்.

தமிழ்நாட்டின் நலனைப் பாதுகாக்கும் பாதுகாவலர்களாக-ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் நம்மோடு இணைந்திருக்கும் எல்லோரையும்-தேர்தல் வரைக்கும் நம்முடனே இணைத்துக்கொண்டு களப்பணியாற்ற வேண்டும். அதற்கான உறுதிமொழியை அந்தக் கூட்டங்களில் எல்லோரும் எடுக்க வேண்டும். முப்பெரும் விழாவில் திமுக உடன்பிறப்புகள் அனைவரையும் ஒருசேர ஒரே இடத்தில் பார்ப்பதற்காக ஆவலோடு காத்திருக்கிறேன். லட்சக்கணக்கான உடன்பிறப்புகள் கரூர் நோக்கி திரண்டு வருவார்கள். எல்லோரும் பாதுகாப்பாக வந்து போவதை உறுதிசெய்யுங்கள்.

அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் இருக்க வேண்டும். மேற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளரும்-மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி, விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்து வருகிறார். அத்தனை மாவட்ட செயலாளர்களும் செந்தில்பாலாஜிக்கு துணையாக இருக்கவேண்டும். முப்பெரும் விழா முடிந்த பிறகு, செப்டம்பர் 20ம் நாள், ஓரணியில் தமிழ்நாடு கூட்டங்களை திமுக மாவட்டங்கள் வாரியாக நடத்த வேண்டும்.

நமது அரசின் திட்டங்களால், மக்களிடையே நமக்கு இருக்கும் ஆதரவு உணர்வை அப்படியே தேர்தல் வரைக்கும் எடுத்துச் சென்று அறுவடை செய்ய ஒவ்வொருவரும் களத்தில் தீவிரமாக பணியாற்ற வேண்டும். அடுத்து நமது இலக்கு ஒன்றுதான், அது, 2026ல் திராவிட மாடல் 2.0 அமைய வேண்டும் என்பதே. அதற்கு நான் உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான், தேர்தல் நாள் வரைக்கும் பசி-தூக்கம்-ஓய்வை மறந்து, உழைப்பை கொடுங்கள்! ஓய்வறியாச் சூரியனாக உழைப்போம்! 2026லும் நாமே உதிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

* 2026ல் நாம் பெறப்போகும் வெற்றி, திமுகவுக்கான வெற்றி மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கான வெற்றி.

எப்படிப்பட்ட ஆபத்துகள் தமிழ்நாட்டைச் சூழ்ந்திருக்கிறதென்று சாதாரணமாக டீக்கடையில் பேப்பர் படிப்போர் கூட உணர்ந்திருக்கிறார்கள்.