மதுரை: விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக இருப்பவர் செந்தில்குமரன். இவரது மகன் பூபாலன். மதுரை அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் போலீசாக உள்ளார். பூபாலனின் மனைவியை வரதட்சணை கேட்டு கொடூரமாக தாக்கியதில் காயமடைந்த அவர், மதுரை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான புகாரில் கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமரன், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகிய 4 பேர் மீது கொலை முயற்சி, பெண் வன்கொடுமை செய்தல், கொடுங்காயங்கள் ஏற்படுத்துதல், சித்ரவதை செய்தல், வரதட்சணை ெகாடுமை உள்ளிட்ட பிரிவுகளில் அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து போலீஸ்கார் பூபாலன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பூபாலன் திருப்பூரில் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், மனைவி விஜயா ஆகியோர் மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனு நீதிபதி எஸ்.சிவகடாட்சம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் மாவட்ட தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பழனிச்சாமி ஆஜராகி வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர்கள் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இருவரும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.