நண்பருக்கு கிட்னி தானம் தர அனுமதி மறுத்த விவகாரம்; நட்பை ஆவண, ஆதாரங்கள் மூலம் நிரூபிக்க முடியுமா..? ஐகோர்ட் கேள்வி
சென்னை: தஞ்சாவூரை சேந்த பெரியசாமி என்பவர், சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரது நண்பரான ஈரோட்டை சேர்ந்த கணேசன் என்பவர் கிட்னியை தானமாக தர முன்வந்தார். இதையடுத்து, கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி கோரி, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகார குழுவிடம் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஈரோடு மாவட்ட கலெக்டர் அளித்த அறிக்கையில், கணேசனும், பெரியசாமியும் குடும்ப நண்பர்கள் என்று நிரூபிக்க எந்த ஆவண ஆதாரங்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையின் அடிப்படையில், கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்து, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகார குழு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, கிட்னியை தானமாக பெற உள்ள பெரியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குடும்ப நட்பை எப்படி ஆவண ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். நட்பு என்ற உறவு, உணர்வு அடிப்படையிலானது. அதை ஆவணங்கள் தீர்மானிக்க முடியாது. எனவே, உத்தரவு ரத்து ெசய்யப்படுகிறது.
பெரியசாமியும், கணேசனும் அங்கீகார குழு முன் குடும்பத்தினருடன் இன்று ஆஜராக வேண்டும். அவர்களின் விண்ணப்பத்தை அங்கீகார குழு மறுபரிசீலனை செய்து 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும். உறவினர்கள் அல்லாதவர்கள், உடல் உறுப்பு தானம் செய்வதை சட்டம் தடை செய்யவில்லை. மாறாக, அன்பு மற்றும் பாசத்தின் அடிப்படையில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட வேண்டும் என்று மட்டுமே சட்டம் வலியுறுத்துகிறது.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் போது பண பரிவர்த்தனைகள் இருக்க கூடாது என்பதையும், அழுத்தம் இருக்கக் கூடாது என்பதையும் மட்டுமே சட்டம் வலியுறுத்துகிறது என்று உத்தரவில் தெரிவித்துள்ளார்.