வெறித்தனமான நாய்கள், ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய்களை தவிர மற்ற நாய்களை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: வெறித்தனமான நாய்கள், ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய்களை தவிர மற்ற நாய்களை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டிருந்தது. இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை எதிர்த்து விலங்கு ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என். வி. அஞ்சாரியா அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
அதில்; தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை ஊசி மற்றும் உரிய தடுப்பூசிகள் செலுத்தி மீண்டும் தெருவிலேயே விடலாம். ரேபிஸ், தொற்று உள்ள நாய்களை மட்டும் காப்பகத்தில் அடைக்க வேண்டும். தெருக்களில் நாய்களுக்கு உணவளிக்க தனி இடத்தை ஏற்படுத்த வேண்டும். பொது இடங்களில் உணவளிக்கக் கூடாது. அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் உள்ள தெரு நாய் விவகார வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெரு நாய்கள் விவகாரத்தில் நாடு முழுவதும் பொருந்தக் கூடிய ஒட்டுமொத்த வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்படுத்தப்படும். இது தொடர்பாக அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.