படுக்கை அறையில் பிணமாக கிடந்த டாக்டர் மாரடைப்பால் இறந்தாரா? போலீசார் விசாரணை: சென்னை முகப்பேரில் பரபரப்பு
அண்ணாநகர்: சென்னை முகப்பேர் பகுதியில் தனியார் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர், வீட்டின் படுக்கை அறையில் பிணமாக கிடந்தார். அவர், மாரடைப்பால் இறந்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை முகப்பேர் பகுதியில் வசித்து வந்தவர் பழனிவேல் (51). சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள பிரபல தனியார் கண் மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கடந்த 6 வருடத்துக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள், பெங்களூரு மற்றும் அரியலூரில் படித்து வருகின்றனர். அதனால் பழனிவேல், தனியாகத்தான் வசித்து வந்தார்.
வழக்கம் போல் நேற்றிரவு இரு மகள்களும் பழனிவேலுக்கு போன் செய்தனர். பின்னர், படுக்கைக்கு சென்று விட்டனர். பெங்களுரில் படித்து வரும் மகள், இன்று காலையில் பழனிவேலுக்கு போன் செய்துள்ளார்.
அவர் எடுக்கவில்லை. பலமுறை போன் செய்தும் எடுக்காததால் பயத்தில் பக்கத்தில் உள்ளவர்களுக்கு போன் செய்து விவரத்தை கூறியுள்ளார். உடனே அவர்கள், விரைந்து சென்று கதவை தட்டினர். திறக்கப்படவில்லை. வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் கதவை திறந்து பார்த்தனர். படுக்கை அறையில் பழனிவேல் எந்தவித அசைவும் இன்றி மயங்கிய நிலையில் கிடந்தார். அதிர்ச்சியில் நொளம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். படுக்கையில் பழனிவேல் இறந்து கிடந்தார். பின்னர் இரு மகள்களுக்கும், தந்தை இறந்த தகவலை போலீசார் தெரிவித்தனர். அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். முதல்கட்டமாக மாரடைப்பால் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் பிரேத பரிசோதனை கிடைத்த பிறகுதான் மருத்துவர் எப்படி இறந்தார் என்று தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திள்ளது.