Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் முடக்கம் ஒன்றிய அரசை கண்டித்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்: கோவையில் இன்று மதுரையில் நாளை நடக்கிறது

சென்னை: கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்கியுள்ள ஒன்றிய பாஜ அரசை கண்டித்து இன்றும், நாளையும் (நவ.20, 21) திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங் களை நிராகரித்து திட்ட அறிக்கைகளை திருப்பி அனுப்பியுள்ளது ஒன்றிய அரசு. மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நகரின் மக்கள் தொகை 20 லட்சத்துக்கு மேல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ள ஒன்றிய அரசு, கோவையின் மக்கள் தொகை 15.8 லட்சமும் மதுரை மக்கள் தொகை 10.2 லட்சம் என்றும் தெரிவித்துள்ளது.

அதேசமயம் இதே அளவிலான மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேசத்தின் ஆக்ரா மற்றும் கான்பூர், மகாராஷ்டிராவில் நாக்பூர் மற்றும் புனே, மத்திய பிரதேசத்தில் இந்தூர் மற்றும் குஜராத்தில் சூரத் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ஒன்றிய பாஜ அரசின் இந்த முடிவுக்கு மதுரை, கோவை மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கோவை- மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கியுள்ள ஒன்றிய பாஜ அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டுக்கான ஜிஎஸ்டி நிதி பகிர்வில் பாரபட்சம், மாணவர்களின் கல்வி நிதியைக் கூட ஒதுக்க மறுப்பது என தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் ஒன்றிய பாஜ அரசு தற்போது கோவை - மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களையும் முடக்கி வஞ்சித்துள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கோடு செயலாற்றி வரும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி‘களின் சார்பில் வரும் 20ம்தேதி வியாழக்கிழமை கோவையிலும், 21ம்தேதி வெள்ளிக்கிழமை மதுரையிலும் காலை 10 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.