கம்பம்: வரும் 2026ல் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும் என வைகோ தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம், கம்பத்தில் மதிமுக சார்பில் நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. தேனி மாவட்டச் செயலர் வி.எஸ்.கே.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:
பெரியாறு அணை உரிமை மீட்புப் பிரச்னையில் கேரள அரசுக்கு எதிராகத் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. தேனி மாவட்டம், பொட்டிப்புரத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திட்டத்தைச் செயல்படுத்த விடாமல் தடுத்தோம். அப்போது, கேரள அரசு என்னை ஆதரித்தது.
தற்போது கேரள அரசு, அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றி பெரியாறு அணையில் முழுக் கொள்ளளவு தண்ணீர் தேக்க முட்டுக்கட்டை போட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டத்தில் பங்கேற்க நான் எப்போதும் தயாராக உள்ளேன். வருகிற 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சி அமையும்.இவ்வாறு அவர் பேசினார்.