சென்னை: திமுக உடனான கூட்டணி புனிதமானது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கியுள்ளது. அந்தவகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் கலந்தாலோசனைக் கூட்டத்தினை அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் நடத்தவுள்ளார். அதன்படி சென்னை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் இன்று தொடங்கி 21ம் தேதி வரை 4 நாட்களுக்கு மண்டல வாரியாக நடைபெறவுள்ளது. இன்று சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டல கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது கட்சியின் அடிப்படை கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கமல் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன்; திமுகவில் சேர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள், இது கூட்டணி கிடையாது அதற்கும் மேல் புனிதமானது. நீதிக்கட்சியில் இருந்து திமுக வந்தது, மக்கள் நீதி மய்யத்திலும் நீதி உள்ளது. ஆசியாவின் முதல் மய்யவாத கட்சி மக்கள் நீதி மய்யம் தான். நாட்டை இடது, வலது என பிரிப்பதை அனுமதிக்க கூடாது என்று கூறினார்.