Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திமுக வழக்கை தொடர்ந்து எஸ்ஐஆரை எதிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து மனு தாக்கல்: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து இந்த விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பல்வேறு கேள்விகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு எழுப்பியது. மேலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையில் ஆதார் அட்டையையும் ஆவணமாக இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கடந்த மாதம் பீகார் மாநிலத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதுபோன்ற சூழலில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்டம் கடந்த 6ம் தேதி நடந்து முடிந்து நிலையில் இரண்டாம் கட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து வரும் 14ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களுக்கு வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கடந்த 27ம் தேதி அறிவிப்பை வெளியிட்டிருந்த இந்திய தேர்தல் ஆணையம், அதன் பணிகளை தொடங்கி நடத்தி வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த நடவடிக்கைகள் விவகாரம் தொடர்பாக திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ம் தேதி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில்,\\”பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது வரையில் நிலுவையில் உள்ளது. குறிப்பாக இந்த விவகாரத்தில் முன்னதாக தேர்தல் ஆணையம் செய்திருந்திருந்த குளறுபடிகளை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்டித்தது மட்டுமில்லாமல், சில உத்தரவுகளையும் பிற்பபித்திருந்தது. இருப்பினும் பீகாரில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் கூட 3.66 லட்சம் வாக்காளர்களை நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த எஸ்.ஐ.ஆர் அறிவிப்பு என்பது சட்டவிரோதமாகும். இதன்மூலம் பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர்கள் நீக்கப்படுவர் என்ற அச்சம் உள்ளது.எனவே தமிழ்நாட்டில் நடத்தப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு விரோதமானது என்பதால், இந்த விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும். இதுகுறித்து உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மனுவை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பான வழக்கை இன்று விசாரிக்க உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த நடவடிக்கைக்கு எதிராகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக தரப்பில் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தொல்.திருமாவளவன் (வி.சி.க ), மேற்குவங்கம் காங்கிரஸ் கமிட்டி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக அடுத்தடுத்து புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மனுக்கள் அனைத்தும் இன்றைய தினம் திமுக வழக்கோடு இணைத்து விசாரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.