Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திமுக-காங்கிரஸ் முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரசின் ஐவர் குழு சந்திப்பு

சென்னை: திமுக- காங்கிரஸ் முதல் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரசின் ஐவர் குழு சந்தித்தது. விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி பங்கீடு பேச்சு நடத்தும் குழுவில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா மற்றும் சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஸ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் நேற்று காலை சத்தியமூர்த்திபவனில் மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். 2021 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த முறை அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் பேசினாலும் வட மாநிலமான பீகாரிலேயே காங்கிரஸ் படுத்தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் எத்தனை சீட் கேட்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நேற்று மதியம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் ஐவர் குழு, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. காங்கிரஸ் சார்பில் தங்களுக்கு சாதகமான 75 தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. அதிலிருந்து 40 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இந்த குழு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதாவது, ஒரு நாடாளுமன்ற தொதிக்கு ஒரு சட்டமன்ற தொகுதி என தமிழ்நாட்டில் 39 தொகுதிகளின் பட்டியலை தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

* திமுக குழு அமைத்ததும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தையை முடித்து வெளியில் வந்த பின்னர் அண்ணா அறிவாலயத்தில் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்தோம். திமுக குழு அமைத்தவுடன் பேச்சுவார்த்தை தொடங்கும். குறைவான இடங்களை பெற்றாலும் கூட்டணியில் இடம்பெறுவீர்களா என்று கேட்கிறீர்கள். அந்த சந்தேகம் பத்திரிகையாளர்களுக்கு வரக்கூடாது. வரும் தேர்தலில் காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள்’’ என்றார்.