சென்னை : சென்னையில் திமுக நிர்வாகி இரா.ஏ.பாபு இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "நெருக்கடி நிலை காலத்தில் திமுகவில் தலைவர் முதல் தொண்டர்கள் வரை பலர் கொடுமைகளை அனுபவித்தனர். எந்த தியாகத்துக்கும் தயாராக இருப்பவர்கள் திமுகவினர்; அதனால்தான் இன்றைக்கும் கம்பீரமாக இருக்கிறார்கள். இன்றைக்கு யார் யாரோ கிளம்பி திமுகவை அழித்துவிடலாம் ஒழித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள், எந்த கொம்பனாலும் இந்த இயக்கத்தை தொட முடியாது.
எஸ்.ஐ.ஆர். பணிகள் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது. எஸ்ஐஆர் படிவங்களில் அளிக்கும் பெயர்கள் மட்டும்தான் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என்ற நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் வரும்போது நாம் வீட்டில் இல்லாமல் போய்விட்டால் வாக்குகளை இழக்கும் சூழல் ஏற்படும். இதனால் ஏழைகள், கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். SIR பணிகளை எதிர்த்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, வழக்கு தொடர்ந்திருக்கிறோம். சட்ட போராட்டம் ஒருபுறம் நடந்தாலும், வாக்காளர் திருத்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, அதை கவனிக்க வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது.ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர்."இவ்வாறு தெரிவித்தார்.

