Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணிகளுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு : உச்சநீதிமன்றத்தில் நவம்பர் 11ம் தேதி விசாரணை!!

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணிகளுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு, சுப்ரீம்கோர்ட்டில் நவம்பர் 11ம் தேதி விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது. பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த நடவடிக்கைகளால், 47 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கடந்த 27ம் தேதி அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதையடுத்து அதற்கான பணிகள் தமிழகத்தில் தொடங்கி உள்ளன.

இதுபோன்ற சூழலில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த நடவடிக்கை தொடர்பான விவகாரத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அதில் கூறியிருப்பதாவது: பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. குறிப்பாக இந்த விவகாரத்தில் முன்னதாக தேர்தல் ஆணையம் செய்திருந்திருந்த குளறுபடிகளை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்டித்தது மட்டுமில்லாமல், சில உத்தரவுகளையும் பிற்பபித்திருந்தது. இருப்பினும் பீகாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் கூட 3.66 லட்சம் வாக்காளர்களை நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல்வேறு குளறுபடிகள் நீடித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களே உள்ள காலகட்டத்தில், இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அறிவித்துள்ளது. இதனை கண்டிப்பாக ஏற்க இயலாது. ஏனெனில் இதுபோன்ற செயல்பாடுகள் என்பது அவசர கதியில் செய்யக்கூடிய வேலைகள் கிடையாது. குறிப்பாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். பீகாரில் நடந்தது போன்று தகுதியுள்ள வாக்காளர்களை நீக்கி, தகுதியற்ற வாக்காளர்களைச் சேர்க்கும் சதித்திட்டம் தமிழ்நாட்டிலும் நடக்க வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக பீகாரில் நடைபெற்ற குளறுபடிகள் எதையும் களையாமல், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் தீவிர திருத்தத்தை செயல்படுத்துவது மக்களின் வாக்குரிமையை பறிப்பது மட்டுமில்லாமல், ஜனநாயகத்தை அடியோடு குழிதோண்டி புதைக்கும் செயலாகும். குறிப்பாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-பிரிவு 169-ன்படி ஒன்றிய அரசின் அரசிதழில் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு, அதன் மூலமே வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட வேண்டும். அதனை பின்பற்றாமல் தேர்தல் ஆணையமே அறிவிப்பை தன்னிச்சையாக வெளியிடுவது, அரசியல் சட்டத்திற்கும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கும் எதிரானது.

இந்த எஸ்.ஐ.ஆர் அறிவிப்பே சட்டவிரோதமாகும். இதன்மூலம் பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர்கள் நீக்கப்படுவர் என்ற அச்சம் உள்ளது. மேலும் டிசம்பர் மாதம் தமிழ்நாட்டில் மழைக்காலம் ஆகும். அது வாக்காளர் கணக்கெடுப்புக்கு உகந்தது கிடையாது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பு உள்ள காலகட்டத்தில் கிறிஸ்துமஸ், பொங்கல் ஆகிய பண்டிகைகள் இருக்கிறது. இதனால் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில் விடுபடும் வாக்காளர்களோ, சேர விரும்பும் வாக்காளர்களோ மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி, தங்களது வாக்குரிமையை இழக்கும் நிலை ஏற்படும்.

எனவே பீகார் வழக்கில் ஒரு இறுதி உத்தரவு வெளியாகாத நிலையில் தமிழ்நாட்டில் நடத்துவதாக அறிவித்துள்ள சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கு விரோதமானது என்பதால், இந்த விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும். இதுகுறித்து உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.