Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தீபாவளி பண்டிகை கொண்டாட சுற்றுலா பயணிகள் குவிந்தனர் களைகட்டியது ஊட்டி, கொடைக்கானல்

ஊட்டி: தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் 4 நாள் தொடர் விடுமுறை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதலே நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வர துவங்கினர். தற்போது ஊட்டியில் இரண்டாவது சீசன் களைகட்டியுள்ளதால் தேனிலவு தம்பதிகள் வருகையும் அதிகரித்துள்ளது.இதன் காரணமாக ஊட்டி நகரில் உள்ள ஓட்டல்கள், காட்டேஜ்களில் அனைத்து அறைகளும் நிரம்பியுள்ளன.

சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கும் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை கொண்டாட நேற்று சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது. கடந்த ஒரு வாரமாக நிலவிய தொடர் சாரல் மழை, பனிமூட்டத்தால் அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது.

இந்த ஜில் கிளைமேட்டை அனுபவித்தபடி சுற்றுலாப் பயணிகள் மோயர் பாயிண்ட், கோக்கர்ஸ் வாக், பில்லர் ராக், பைன் பாரஸ்ட், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களில் இயற்கை பசுமை கொஞ்சும் காட்சிகளையும், விண் முட்டி நிற்கும் மலை முகடுகளோடு மோதி விளையாடும் வெண்பஞ்சு மேகங்களையும் கண்டு ரசித்தனர்.

நட்சத்திர ஏரியில் செயற்கை நீரூற்றை ரசித்தபடி படகு சவாரி செய்தும், ஏரி சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் ரைடிங் செய்தும் மகிழ்ந்தனர். பிரையண்ட் பூங்காவில் பூத்து குலுங்கும் பல வண்ண மலர்களை கண்டு ரசித்ததுடன் செல்பி, புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் அனைத்து சுற்றுலாத் தொழில் புரிவோரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.