Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் விற்பனை களைகட்டியது: சென்னை திநகர் மக்கள் வெள்ளத்தில் குலுங்கியது

* கடைகள் வாடிக்கையாளர்களால் திக்குமுக்காடியது

* ஜவுளி, பட்டாசு, ஸ்வீட் விற்பனை மும்முரம்

* ரயில்கள் அனைத்தும் ஹவுஸ் புல்

* அரசு, தனியார் பஸ்களில் விறுவிறு முன்பதிவு

சென்னை: தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியுள்ளது. அது மட்டுமல்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் தீபாவளி பொருட்கள் வாங்க தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் விற்பனை களைகட்டியது. சென்னையில் தி.நகரில் கூட்டம் வழக்கத்தை விட காலை முதல் அலைமோதியது. நேரம் ஆக, ஆக எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தது. சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு, தனியார் பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்படைந்துள்ளது.

தீபாவளி பண்டிகை வருகிற 20ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியுள்ளது. அது மட்டுமல்லாமல் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் வேறு. அது மட்டுமல்லாமல் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் காலையில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட சற்று குறைவாக இருந்தது. பல இடங்களில் சாரல் மழை பெய்தது. சென்னையிலும் இதே நிலை தான் நேற்று காலை நீடித்தது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தீபாவளி பொருட்கள் வாங்க நேற்று காலை முதல் பஜார் வீதிகளில் திரள தொடங்கினர். குடும்பம், குடும்பமாக வந்து தீபாவளி பண்டிகைக்கான பொருட்களை தேர்வு செய்து வாங்கி சென்றனர். அவர்கள் தங்களுக்கு தேவையான சட்டை, பேண்ட், சுடிதார், சேலை, வேஷ்டி உள்ளிட்ட துணிமணிகளை தேர்ந்ெதடுத்து வாங்கினர். அதே நேரத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் விதவிதமான டிசைன்களில் துணிகள் விற்பனைக்காக வந்து இருந்தது.

புதிய மாடல் ஆடைகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். பல துணி கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நேற்று காணப்பட்டது. இதனால் மக்கள் கடைகளுக்கு வெளியே காத்து இருந்து பொருட்களை வாங்கி சென்றனர். சென்னையை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் என்பது குறைவாக இருந்து வருகிறது. அவ்வப்போது சாரல் மழை வேறு பெய்து வருகிறது. இதனால், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடை வீதிகளில் தீபாவளி விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

அது மட்டுமல்லாமல் பொருட்கள் வாங்குவதற்காக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலமான ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பொருட்களை வாங்க மக்கள் சென்னைக்கு வர தொடங்கியுள்ளனர். இதனால் வர்த்தக பகுதியான சென்னை தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பிராட்வே, மயிலாப்பூர், குரோம்பேட்டை, பாடி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் நேற்று காலையில் அதிகமாக காணப்பட்டது.

அவர்கள் தங்களுக்கு தேவையான துணிமணிகளை வாங்கி சென்றனர். குறிப்பாக தி.நகரில் உள்ளிட்ட பகுதிகளில் 12 மணிக்கு மேல் தான் வாடிக்கையாளர் வரத் தொடங்குவார்கள். ஆனால், நேற்று காலை 9.30 மணியில் இருந்தே வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கினர். தொடர்ந்து நேரம் ஆக, ஆக எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தது. ரங்கநாதன் தெருவில் துணி போன்ற பொருட்களை வாங்குவதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மின்சார ரயில்களில் வந்து இறங்கினார்கள்.

இதனால், ஒவ்வொரு ரயில் வரும் போதும், ரங்கநாதன் தெருவில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அந்த பகுதியே ஒரு திருவிழா கூட்டம் போல காணப்பட்டது. அதே நேரத்தில் தி.நகரில் உள்ள ஒவ்வொரு கடைகளிலும் வாடிக்கையாளர் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு கடைகளில் இருந்து பொருட்களை வாங்கி வெளியே வருவதும், உள்ளே செல்வதுமாக இருந்தது. இதனால் கடைகளின் நுழைவு வாயில் பகுதிகளில் நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் தி.நகர் உள்ளிட்ட பகுதிகள் மக்கள் வெள்ளத்தில் குலுங்கின.

நேற்று காலையில் தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. மழையை பொருட்படுத்தாமல் குடைகளை பிடித்தவாறு பொருட்களை வாங்கிய காட்சியை காண முடிந்தது. இதே போல தி.நகர் உஸ்மான் சாலை, பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளிலும் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் குவிந்தனர். அது மட்டுமல்லாமல் சென்னையில் உள்ள சாலையோரம் உள்ள கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இரவு 10 மணி வரை இந்த கூட்டம் காணப்பட்டது. ஒவ்வொருவரும் குடும்பத்துடன் தீபாவளி பர்ச்சேஸில் மும்முரமாக ஈடுபட்டனர். ஒவ்வொரு துணிகடைகள் முன்பாக மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. குறிப்பாக தலை தீபாவளி கொண்டாடும் தம்பதியர்களின் உறவினர்கள் அதிக அளவில் புதிய துணிகளை வாங்கிய காட்சியை காண முடிந்தது. அதே நேரத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் பாதுகாப்பு மற்றும் வழிப்பறி, திருட்டு சம்பவங்களை தடுக்க தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே மட்டுமே எஞ்சியுள்ளதால் வரும் நாட்களில் பஜார் வீதிகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், இறுதிக்கட்ட தீபாவளி பர்சேஸ்ஸை சமாளிக்கும் வகையில் கடைகளை சீக்கிரம் திறக்கவும் கடைக்காரர்கள் முடிவு செய்துள்ளனர். பஸ், ரயில் ஹவுஸ் புல்: சென்னையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களை சார்ந்தவர்கள், கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

அவர்கள் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால், அவர்கள் முன்கூட்டியே ரயில்களில் முன்பதிவு செய்ய தொடங்கினர். இதனால், சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் அனைத்து ரயில்களும் ஹவுஸ் புல்லாகியுள்ளது. அனைத்து ரயில்களிலும் வெயிட்டிங் லிஸ்ட் அதிக அளவில் இருந்து வருகிறது. மேற்கொண்டு டிக்கெட் புக் செய்ய முடியாத அளவுக்கு தான் ஒவ்வொரு ரயிலின் முன்பதிவு என்பது இருந்து வருகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் வியாழக்கிழமை முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என தொடர்ச்சியாக அனைத்து ரயில்களிலும் இடம் இல்லாத நிலையே இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அறிவிக்கபட்ட சிறப்பு ரயில்களிலும் டிக்கெட் இல்லாத நிலை தான் தற்போது நீடித்து வருகிறது.

இதனால், தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பாகவும், தீபாவளிக்கு பின்பாகவும் சிறப்பு ரயில்களை கூடுதலாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகளிடையே எழுந்துள்ளது. வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் ரயில்களின் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட அனைத்து பஸ்களிலும் டிக்கெட் முன்பதிவு என்பது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வெள்ளிக்கிழமை ஊருக்கு செல்வதற்கான அனைத்து பஸ்களிலும் டிக்கெட் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், அரசு சார்பில் மேலும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் தனியார் பஸ்களிலும் முன்பதிவு மும்முரமாக நடந்து வருகிறது. டிக்ெகட் கட்டணம் அதிகமாக இருந்த போதிலும் எப்படியாவது சொந்த ஊரில் தீபாவளி கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில் பலர் தனியார் பஸ்களையும் நாடி வருகின்றனர்.

* பட்டாசு, ஸ்வீட் விற்பனை

தீபாவளி பண்டிகையில் புத்தாடைகளுக்கு பிறகு மக்கள் மனதில் இடம் பிடிப்பது பட்டாசும், ஸ்வீட்டும் தான். ஒவ்வொருவரும் குடும்பத்துடன் பட்டாசுகளை வெடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் தீவுத்திடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட உள்ளது.

அது மட்டுமல்லாமல் தெருக்களிலும் புதிதாக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் நண்பர்கள், விருந்தினர்களுக்கு ஸ்வீட் வழங்குவதற்காக ஸ்வீட் கடைகளில் பொதுமக்கள் ஆர்டர் கொடுத்து வருகின்றனர். இதனால் அனைத்து ஸ்வீட் கடைகளில் கடந்த சில நாட்களாக ஆர்டர்கள் வந்து குவிந்த காட்சியை காண முடிந்தது.