தீபாவளி பண்டிகை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டுகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு: போக்குவரத்து தொடர்ந்து சீரமைப்பு
அண்ணாநகர்: நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயம்பேடு காய்கறி, பூ, பழம் மற்றும் உணவு தானிய மார்க்கெட்டுகளுக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் அதிகமாக வருவார்கள். இதன்காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது இதை பயன்படுத்தி சமூகவிரோத கும்பல்கள், பொதுமக்களிடம் வழிப்பறி உள்ளிட்டவைகளில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது; தீபாவளி பண்டிகை முன்னிட்டு போக்குவரத்து பாதிக்கக்கூடும் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து நெரிசலை தடுக்க 250க்கும் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து மார்க்கெட்டிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கூட்ட நெரிசலில் குற்றச் சம்பவங்கள் நடந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்யப்படுகிறது. சொந்த ஊருக்கு சென்று மீண்டும் 21ம்தேதி வருவார்கள் என்பதால் 23ம்தேதி வரை போலீசார் பாதுகாப்பில் இருப்பார்கள். இவ்வாறு தெரிவித்தனர்.