Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தீபாவளி பண்டிகை கொண்டாட சென்னையில் இருந்து 20 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்: கடைசி நேர ஷாப்பிங் கடை வீதிகளில் மக்கள் வெள்ளம்

சென்னை: தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று காலை முதல் கடைகளில் துணிகள், பட்டாசுகள், ஸ்வீட் விற்பனை களை கட்டியது. மழை பெய்த போதும் மக்கள் திரண்டதால் பஜார் வீதிகள் திக்குமுக்காடியது. பஸ், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. சென்னையில் இருந்து மட்டும் பஸ், ரயில், கார், விமானம் மூலம் சுமார் 20 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் சென்னையில் நேற்று முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

தீபாவளி பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், நண்பர்கள்-விருந்தினர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் தீபாவளி புத்தாடை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. மேலும் பண்டிகைக்கால பல்வேறு சிறப்பு தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தீபாவளிக்கு முந்தைய நாளான நேற்று தமிழகம் முழுவதும் விற்பனை மேலும் அதிகரித்து காணப்பட்டது. சென்னையை பொறுத்தவரை தி.நகர், புரசைவாக்கம், பிரோட்வே, மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, அடையாறு, அண்ணாநகர், தாம்பரம், குரோம்பேட்டை, அம்பத்தூர் பாடி, கீழ்க்கட்டளை உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சென்னையில் நேற்று காலை முதல் விட்டு, விட்டு மழை பெய்தது. இருந்த போதிலும் மழையை பொருட்படுத்தாமல் குடைபிடித்தபடி சென்று தீபாவளி ‘ஷாப்பிங்’ செய்தனர்.

தியாகராயநகரில் எங்கு திரும்பினாலும், ஏதோ குடைகள் நகர்ந்து செல்வது போன்ற காட்சியே நேற்று காலையில் அரங்கேறியது. இதுமட்டுமின்றி, ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்தும் மக்கள் அதிகமாக சென்னைக்கு ஜவுளிகளை வாங்க படையெடுத்து வந்த காட்சியை காண முடிந்தது. ரங்கநாதன் தெருவில் துணி வாங்குவதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மின்சார ரயில்களில் வந்து இறங்கினார்கள். இதனால், ஒவ்வொரு ரயில் வரும் போதும், ரங்கநாதன் தெருவில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

அந்த பகுதியே ஒரு திருவிழா கூட்டம் போல காணப்பட்டது. பிற்பகலுக்கு மழை நின்றது. வெயில் அடிக்க தொடங்கியது. இதனால், பிற்பகலுக்கு மேல் இன்னும் கூட்டம் அதிகரித்தது. மாலை 4 மணிக்கு மேல் கடை வீதிகளில் மக்கள் தலைகளாக காட்சியளித்தது. கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருட்டு உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் வகையில் மாறுவேடத்திலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சென்னையில் தீவுத்திடல், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ, மைதானம், நந்தம்பாக்கம், கொட்டிவாக்கம், பாரிமுனை, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. மழை காரணமாக நேற்று முன்தினம் சற்று மந்தமாக இருந்தது. சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடைகளில் நேற்று காலையில் மக்கள் நடமாட்டமே இல்லாத சூழல் காணப்பட்டது. ஒவ்வொரு கடையிலும் ஓரிரு நபர்களே நின்று வாங்கிக்கொண்டு இருந்தனர்.

வியாபாரத்துக்கு மழை சற்று இடம் கொடுத்தால் விற்பனை நன்றாக இருக்கும் என்றும், இன்றும் மழை குறுக்கிட்டால் முதலுக்கு மோசம் ஆகிவிடும் என்றும் வியாபாரிகள் கவலையோடு இருந்தனர். ஆனால் நேற்று பிற்பகலுக்கு பிறகு மழை வழிகொடுத்ததால், பட்டாசு கடைகளை நோக்கி மக்கள் செல்லத் தொடங்கினர். இதனால் பட்டாசு கடைகளில் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியது. இரவில் கூட்டம் மேலும் அதிகரித்தது. அதே போல இனிப்பு, காரம் விற்பனை கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

ஏற்கனவே ஆர்டர் கொடுத்தவர்கள், அதனை கடைகளில் கேட்டு ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். பலர் அந்த நேரத்தில் என்ன புதுவகையான இனிப்புகள் கடைகளில் விற்பனைக்காக இருந்ததோ, அதனை கேட்டு வாங்கினர். அதிலும் நெய் ஸ்வீட்ஸ், காஜூ கட்லி உள்ளிட்ட சில இனிப்பு வகைகளின் விற்பனை படுஜோராக இருந்தது. சில பெரிய கடைகளில் புது ஆர்டர்கள் எடுக்க கடைக்காரர்கள் தயக்கம் காட்டினர். பெரிய ஆர்டர் என்றாலும், இப்போது எங்களால் அதை செய்து கொடுக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு படு பிசியாக விற்பனை நடந்தது.

இனிப்பு மட்டுமல்லாது, கார வகைகளிலும் புதிய ரகங்கள் விற்பனைக்கு வந்திருந்தது. அதனையும் கேட்டு வாங்கிச் சென்றதையும் பல இடங்களில் பார்க்க முடிந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் விற்பனையில் சற்று சுணக்கம் இருந்தாலும், கடந்த சில நாட்களாக விற்பனை நன்றாக இருப்பதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர். சென்னை மாநகரில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர் என லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் மற்றும் கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட விஷேச தினங்களில், தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று தீபாவளி கொண்டாடப்படுவதால், அவர்கள் கடந்த வியாழக்கிழமை முதலே ரயில்கள், பஸ்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். இதனால் சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இருந்து புறப்பட்ட அனைத்து ரயில்களிலும் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

முன்பதிவு செய்யப்பட்டாத பெட்டிகளில் நிற்பதற்கு கூட இடம் இல்லாத அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.  இறுதி நாளான நேற்றும் சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட அனைத்து ரயில்களிலும் மக்கள் வெள்ளம் காணப்பட்டது. இதேபோல் தமிழக அரசின் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஊருக்கு செல்வதற்கு வசதியாக வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன், சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

மேலும் தனியார் சார்பில் அதிக அளவில் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால், ரயில் நிலையம், பஸ்நிலையங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதனிடையே தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து நேற்று முன்தினம் வரை 18 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியானது.

அதன்படி 9.5 லட்சம் பேர் சிறப்பு ரயில்கள் மூலமும், 6.15 லட்சம் பேர் அரசு பஸ்கள் மூலமும், ஆம்னி பஸ்களில் 2 லட்சம் பேர் வரையிலும், 1.5 லட்சம் பேர் வாகனங்கள் மூலமும் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சென்றனர். அது மட்டுமல்லாமல் விமானம் மூலமும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். இறுதி நாளான நேற்று காலையும் நிறைய பேர் சொந்த ஊர்களுக்கு ரயில், பஸ், கார், விமானம் மூலம் படையெடுத்தனர். அதுவும் நேற்று 1160 ஆம்னி பேருந்துகளில் 41,700 பயணிகள் முன்பதிவு செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் நேற்றுடன் மொத்தம் சுமார் 20 லட்சம் பேர் வரை சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று இருக்கலாம் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சென்னையில் உள்ள சாலைகள் அனைத்தும் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், எந்தவித இடைஞ்சலும் இன்றி சாலைகளில் பயணம் செய்ய முடிந்தது. இயக்கப்பட்ட லோக்கல் பஸ்களில் குறைந்த அளவிலேயே கூட்டம் காணப்பட்டது.

தீபாவளி பண்டிகையன்று குடும்பத்தோடு கோயில்களுக்கும் சென்று பொதுமக்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். இதனால் இன்று பெரும்பாலான கோயில்களில் சிறப்பு பூஜைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத்தலங்களுக்கும் ஏராளமான பொதுமக்கள் செல்வார்கள் என்பதால் அங்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு மறுநாளான செவ்வாய் கிழமை அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், சொந்த ஊர் புறப்பட்டு சென்றவர்கள் உடனடியாக திரும்பவர வாய்ப்பில்லை. இதனால், செவ்வாய்க்கிழமை வரை கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு இல்லை. செவ்வாய் கிழமைக்கு மேல் சென்னைக்கு திரும்புவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு சென்னை வழக்கமான நிலைக்கு திரும்ப தொடங்கும்.

* பைக் வாங்க ஆர்வம்

சமீபத்தில் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டதால், அதன் விலை ஏற்கனவே இருந்த விலைகளை விட குறைந்து இருந்தது. இதனுடன் ஒவ்வொரு கார் நிறுவனங்களும், கூடுதல் சலுகைகளையும் அறிவித்து இருந்தனர். இதனால் மோட்டார் சைக்கிள்கள், கார்களை ‘புக்கிங்’ செய்வதிலும் சிலர் ஆர்வம் காட்டினர். அதற்கேற்றாற்போல், ஆட்டோமொபைல் கடைகளிலும் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்து வருகிறது.

* மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்

விசேஷ நாட்களில் நிறைய பேர் நண்பர்களுக்கு மது விருந்து அளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. முண்டியடித்து கொண்டு சரக்குகளை வாங்கிய காட்சிகளை காண முடிந்தது. நேற்றும் கடை திறந்தது முதல் மதுபான கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதுமட்டுமல்லாது நேற்று ஞாயிற்றுக்கிழமை வேறு. இதனால், கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. மதுப்பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மதுபானங்களை வாங்கி சென்ற காட்சியை காண முடிந்தது.